Saturday, November 28, 2009

தமிழனின் பிரச்சினைக்கு குரல் கொடுங்கள்

"குண்டு வீசுவதால் என்னை முடக்கிவிட முடியாது" ...இளங்கோவன் ஆவேசம் என்று ஒரு செய்தியை ஊடகங்களில் படித்து இருப்பீர்கள் .தமிழர்களுக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் .அவருடைய சேவையை தடுத்து முடக்கி விட முடியாது போல் சொல்கிறார் இவர் .பகுத்தறிவாளர் பெரியாரின் பேரன் இன்னும் ஆலயத்தில் நுழைய முடியாத தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆலய பிரவேசம் மேற்கொண்டார் .சுயமரியாதை கல்யாணம் நடத்தி வைத்தார் .பெரியாரின் கொள்கையை பட்டி தொட்டி எல்லாம் முழங்கினார்.அதனால் அவர் வீட்டு மீது குண்டு வீசினார்கள் என்றால் ,நாம் இந்த கூக்குரலை கேட்கலாம் .

ஆனால் பப்ளிசிடிக்காக கூகுரலிடுவதும்,மைக் பிடித்தோ அல்லது பத்திரிக்கை யாளர்கள் கூட்டத்தில் உரக்க பேசுவதாலோ இவர்களால் தமிழ் நலனுக்கோ தமிழ் நாட்டு மக்களுக்கோ ஒன்றும் ஆகி விடபோவதில்லை .இவர்களால் நாம் நமது உரிமையை இழந்து கொண்டு இருக்கிறோம் என்பது தான் உண்மை .
கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவை வசைபடியே பப்ளிசிட்டியை தேடி கொண்டவர் இந்த ஈ.வி .கே .எஸ் இளங்கோவன் .தனக்கு துன்பம் வரும் போது மட்டும் கூக்குரலிடும் இந்த ஜனநாயகவாதிகளுக்கு முல்லை பெரியார் பிரச்சினை,காவிரி பிரச்சினை ,ஒகேனக்கல் பிரச்சினை,பாலாறு பிரச்சினை ராமேஸ்வரம் மீனவர் பிரச்சினை போன்றவற்றிற்கு குரல் கொடுப்பர்தற்கு தொண்டையில் ஏதாவது கோளரா என்றும் தெரியவில்லை .

சில்லறை ஆட்களை எதிர்த்து அரசியல் பண்ணும் இளங்கோவன் அவர்களே ,டெல்லிக்கு சென்று தமிழனின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்க பட்டு கொண்டிருகிறது .நீங்கள் சரியான முறையில் தமிழனுக்கு ,தமிழ் நாட்டுக்கு உதவ வில்லை .அதனால் தமிழர் உரிமைக்காக போராட போகிறேன் என்று சோனியாவிடம் உரக்க கூறி கொண்டு வாருங்கள் ...உங்கள் ஆவேச பேச்சை தமிழகம் செவிமடுக்கும் .அதுவரை உங்கள் கூக்குரல்கள் கிணற்றுக்குள் இருந்து தவளை கத்துவது போல்தான் ..

அச்சம் தவிர்ப்போம் ...வெற்றி சிகரத்தை தொடுவோம் ....



"எங்கே மதிப்பு இருக்கிறதோ அங்கே அச்சமும் இருக்கும். ஆனால் அச்சமுள்ள எல்லா இடத்திலும் மதிப்பு இருப்பதில்லை ! ஏனென்றால் அச்சம் மதிப்பை விட அகண்ட தளத்தில் விரிந்திருக்கிறது என்று ஊகிக்கலாம்." "ஏனென்று சிந்தித்து வியப்புறுவதில்தான் ஒருவனுக்கு ஞானம் பிறக்கிறது." என்கிறார் தத்துவ ஞானி சாக்ரடிஸ்.
அச்சம் என்பது பற்றி சக்ரடிசின் வார்த்தையை கவனியுங்கள் .அச்சம் தான் விரிந்து கிடக்கிறது.ஏன் அச்சம் என்பதை பற்றி சிந்திக்கும் போது ஞானம் வருகிறது .எனவே நாம் அச்சத்தை தவிர்க்க வேண்டும் .அச்சம் தவிர்த்து சுய பரிசோதனை செய்ய முற்படவேண்டும் .அச்சமில்லை ..அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே ..உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் என்றார் சுப்பிரமணிய பாரதி ..
ஒருமுறை இரண்டு நண்பர்கள் கானகம் வழியே நடந்து வந்துகொண்டு இருந்தனர்.திடீரென ஒரு புலி அவர்கள் முன்னால் வந்தது.இருவரும் பயப்படவே இல்லை .தைரியமுடன் புலிக்கு முன்னால் நெஞ்சை நிமிர்த்தி நின்றனர்.அவர்கள் மேல் பாய வந்த புலி அப்படியே நின்றுவிட்டு பின்னால் நகர்ந்து சென்று விட்டது.எனவே சோதனையை எதிர் கொள்ளும் போது அச்சம் கொண்டால் அது மடத்தனம் .
எனவே நாம் அச்சம் தவிர்க்க முற்படும் போது மனதில் கம்பீரம் வருகிறது.அந்த கம்பீரத்தால் மனதுக்குள் ஒரு எழுச்சி ஏற்படுகிறது .அந்த எழுச்சியால் ஏற்படும் வேகம் நம்மை வெற்றியாளனாக மாற்றும் .

அச்சம் தவிர்ப்போம் ...
வெற்றி சிகரத்தை தொடுவோம் ....

Thursday, November 26, 2009

உள்ளுணர்வு

உள்ளுணர்வு… நம்மில் பழக்கப்பட்ட பல விஷயங்களை நாம் அறியாமலேயே செய்கிறோம். உதாரணமாக, பல் துலக்கும் பழக்கம். காலை எழுந்தவுடனேயே தன்னிச்சையாக நமது கைகள் நம்மை அறியாமலேயே குளியலறைக்குச் சென்று பல்துலக்கும் தூரிகையைய் எடுக்கிறது.இவ்வாறு உள்ளுணர்வு தன்னிச்சையாக செய்வதைப் பற்றி ஆல்டஸ் ஹட்ஸ்லி இவ்வாறு கூறுகிறார். “வாழ்க்கையில் எல்லா நடவடிக்கைகளிலும் மிக அற்பமானதிலிருந்து மிக முக்கியமானது வரை ஒன்றுக் கொன்று பொருந்தாத இரண்டு நிலைகளை இணைப்பதில்தான் திறமை அடங்கியுள்ளது”.

அதிக அளவு செயல், அதிக அளவு ஓய்வு.
ஓய்வு பெற வேண்டியது தன்முனைப்பும் உள் மனமும்.
செயல்பட வேண்டியது உயிருள்ள ஆத்மா.

இந்த உள்மனம் ஓய்வு பெற வேண்டியதையே ஒரு கவிஞர் இவ்வாறு கூறுகிறார்…”ஒரு நல்ல நாள், ஒரு நல்ல இரவுத் தூக்கத்திற்கு பிறகுதான் ஆரம்பமாகிறது”. இதை நன்கு உணர்ந்தவர் நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள். இதற்காக அவர் செய்த சுயபரிசோதனை உண்ணாவிரதம், வாரம் ஒரு முறை பேசாதிருத்தல் போன்றவைகளே. நம்மை வசப்படுத்தி ஆள நமக்குத் தெரிந்தால், நம்மால் சுயபரிசோதனை செய்ய முடியும். நாம் செய்வது சரியா, தவறா என்று நாமே தீர்மானிக்க முடியும். நம்மை நாமே ஆராய்ந்து கொள்ளும் போது செயல்கள், முடிவுகள் மற்றும் செயல் முறைகள் பற்றி எல்லாம் விளக்கமாகத் தெரிகிறது. ஓர் இலட்சிய நோக்கும் பாரபட்ச மற்ற மனமும் ஏற்படுகிறது.

“ஒரு சக்தி வாய்ந்த மனிதன் உள்ளத்தில் தோன்றும் ஒற்றை எண்ணம் தான், மாபெரும் நன்மை, தீமைகளைச் செய்கிறது. ஒற்றை எண்ணம் தான் பிரமிடைக் கட்டியது; இஸ்லாமைக் கண்டது; அலெக்சாண்டிரின் நூலகத்தை எரித்தது; தொழுநோயைய் அறவே ஒழித்தது”.

Wednesday, November 25, 2009

சிந்தனை செய்வோம் ..பிரகாசமாய் வாழ்வோம்


மனம் என்பது நமது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் .நமது மனதில் நல்ல சிந்தனைகளை வளர்க்க வேண்டும் .நல்ல சிந்தனைகள் வளர்ந்தால் நமது முகத்தில் ஒரு பிரகாசம் தோன்றும்.உங்களுடைய நன்னடதைகள் மற்றவர்க்கும் பரவும் .எனவே நல்ல சிந்தனைகள் மிகவும் முக்கியம் .

எதையும், யாரையும் சமாளிக்க முடியும். முப்பத்திரண்டு பற்களுக்கிடையில் ஒரு மெல்லிய நாக்கு வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா?· உங்கள் உதடுகளில் எப்போதும் ஒரு புன்முறுவல் ஒட்டிக் கொண்டிருக்கட்டும். எதிர் வருவோர் எல்லோரையும் அது பற்றிக் கொள்ளும்.· சோதனைகளை எதிர்கொள்வதில் தான் மனிதனின் சக்தி வெளிப்படுகிறது.· பணம் போனாலும் பரவாயில்லை. சொல்லை சிதறவிடக் கூடாது.· எதையுமே உடனே செய்து முடித்துவிடுங்கள். ஒதுக்கி வைத்தால் சுமை கூடி இறுதியில் ஒன்றையுமே செய்ய முடியாமல் போய்விடும்.· சிந்திக்காமல் படித்துக் கொண்டே போவது, ஜீரணிக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பதைப் போல.மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுவோம்!!!

நிறைய படிப்போம் ...அதிகமாய் சிந்திப்போம்

Tuesday, November 24, 2009

இலக்குடன் செயல் படுவோம் ....வாழ்க்கையில் வெற்றியடைவோம்




வாழ்வில் நமக்கு இலக்கு தேவைதான். இலக்கு நோக்கியே இயக்கம் என்றாகும்போதுஎதை நோக்கி ஏன் போகிறோம்என்று புரியாமல் இயந்திரங்களாகிவிடுகிறோம். சிலர் இலக்குகளை மீறிஇலக்குகளை நினைத்து தன்னில்வெறியேற்றிக் கொள்கிறார்கள். அப்போது ஆசை, அச்சம் என்று பலப்பலமேகங்களை மீறி உண்மையின் ஒளிவெளிவரும். அதன் தெளிவில் பாதையும் தெரியும்; பயணமும் புரியும்; வாழ்க்கையும் அமைதி அடையும். ஒரு முழுமையான வாழ்வான இதனைஅடைய மனதினை முழுமையாக நம் வசமாக்கிக் கொள்ள வேண்டும்.
ஆனால் நம் மனதும் இலக்கும் ஒன்றாக இருப்பதில்லை. உதாரணமாக, காதலிக்காக காத்திருக்கும் போது கூட மனம் அங்கிருக்கும் பெண்களின் மீதுதாவுகிறது. முழுமையாக முடிவு செய்து ஒரு புத்தகம் வாங்குவதற்காகபுத்தகசாலைக்கு சென்றால் கூட மனம் அங்குள்ள மற்ற புத்தகங்களின் மீதுதாவுகிறது. மனம் எப்பொழுதும் கூடு விட்டு கூடு பாய்ந்து கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட மனதை ஒரு இலக்கில் நிறுத்துவது என்பது பற்றி இந்த மகாபாரதகதை அழகாக விளக்குகிறது.

துரோணனின் மாணவர்கள் அனைவரும் வில் வித்தையில் சிறந்தவர்கள். இலக்குகளை நோக்கி அம்புகளைத் தவறாமல் செலுத்தக் கூடியவர்கள். ஒருபறவையை அடிக்க துரோணர் சொன்னபோது ஒரு சீடனுக்கு மரம் தெரிந்தது. மற்றொருவனுக்கு பறவை முழுதாய் தெரிந்தது. ஆனால் அர்ச்சுனனுக்குபறவையின் கண் மட்டுமே தெரிந்தது. இலக்கு நோக்கி எய்யும் போது கை மீதும்கவனம் இல்லை, வில் மீதும் இல்லை, அம்பு மீதும் இல்லை. இலக்கின் மீதுமட்டுமே. அந்த இலக்கிலும் துல்லியமாக அதன் மையத்தில் மட்டுமே மனம்லயித்திருந்தது. அந்த அலைபாயும் மனதை ஒரு புள்ளியில் நிறுத்தியதாலேயேஅர்ச்சுனன்வில்வித்தையில் சிறந்தவர்என்ற பெயர் பெற்றார்.

எண்ணம் உறுதியாக இருந்தால் எண்ணியபடி உயரலாம். நமது எண்ணம்தான்நம் எதிர்காலத்தை உருவாக்குகிறது”.

Sunday, November 22, 2009

அறம் செய்க


ஒரு ராஜாவின் அரண்மனையில் சிலம்பு ஒன்று காணாமல் போய்விட்டது. அரசனுக்கு கடுங்கோபம். சிலம்பைக் கண்டுபிடிக்க ஒற்றர்களை ஏவினார். சிலம்பை ஒரு மாதத்திற்குள் கண்டுபிடித்து தருபவர்களுக்கு நிறைய பொன், பொருள் பரிசாக அளிக்கப்படும் என்று கூறினார். அதற்கு பிறகு யாரிடமாவதுஇருந்து கண்டுபிடிக்கப்பட்டால்மரண தண்டனைஎன்றும் அறிவித்தார்.
அந்த ஊருக்கு புதிதாக வந்த துறவியின் கையில் சிலம்பு சிக்கியது. அந்த சிலம்புபற்றி அங்குள்ள மக்களிடம் விசாரித்தார் துறவி. உடனே கொடுத்தால் பரிசு, குறிப்பிட்ட நாள்களுக்கு மேல் கொடுத்தால்மரண தண்டனைஎன்றனர். துறவிஅரசர் குறிப்பிட்டிருந்த நாட்களுக்குப் பிறகு சிலம்பைக் கொண்டு சேர்த்தார். “இப்போது உமக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டி இருக்கும்என்றார்அரசர்.

அற வழியில் நடந்த அந்த துறவியின் பதில்
ஒன்று, கிடைத்ததும் ஓடோடி வந்து தந்திருந்தால் பரிசுக்கு ஆசை பட்டதாகஇருக்கும்.
மரண தண்டனை கிடைக்கும் என்று நான் அஞ்சிக் கொடுக்காமலேயே இருந்தால்நான் சாவுக்குப் பயந்தவன் என்று அர்த்தமாகிவிடும் (மரணத்திற்கு பயப்படுவதுஇல்லை).
சிலம்பை அப்படியே வைத்துக் கொண்டால் பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டவன்என்று ஆகிவிடும். (நான் பிறர் பொருளை விரும்புவதே இல்லை)

இப்போது உமக்கு மரண தண்டனை கிடைக்குமேஎன்றார் அரசர். துறவிகம்பீரமாக அரசனைப் பார்த்துமூடனேஅறவழியில் நடக்கும் ஒருவனைஅழிக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை. தர்மம் சட்டத்தை விட மேலானதுஎன்று கூறி சென்றார். அரசர் தலைவணங்கி துறவியைய் அனுப்பி வைத்தார்.

உங்களிடம் சிறந்ததை உலகத்திற்கு கொடுங்கள்.
உலகம், சிறந்ததை உங்களுக்கு கொடுக்கும்

முயலாமை


நாமெல்லோரும் ஆமை மற்றும் முயல்கதையை நன்கு அறிவோம். முயல் தனதுவேகத்தைப் பற்றி தற்பெருமை அடித்துக்கொண்டது. அது ஆமையை போட்டிக்குஅழைத்தது. ஆமையும் அந்த சவாலைஏற்றுக் கொண்டது. ஆமை ஒரே சீராகபோய்க் கொண்டிருந்தது. முயலோ வேகவேகமாக ஓடி ஆமையைத் தனக்குப்பின்னால் வெகுதூரம் விட்டுமுன்னேறியது. அது, தான் போட்டியைநிச்சயமாக வென்று விடுவோம் என்றதன்னம்பிக்கையில் ஒரு சிறு தூக்கம்போடலாம் என்று முடிவெடுத்தது. அதுகண்விழித்துப் பார்த்தபோது, போட்டி ஞபாகத்திற்கு வரவே உடனேஓடத்துவங்கியது. ஆமை ஏற்கனவே இறுதிக் கோட்டை அடைந்து வெற்றி பெற்றுவிட்டதைத்தான் பார்க்க முடிந்தது.

சீரான தொடர்ச்சியான முயற்சிக்கு கட்டுப்பாடு தேவை. சீரற்ற குறிக்கோளற்றமுயற்சியை விட இது முக்கியமானதாகும்.

நகைச்சுவையால் மக்களின் மனங்களில் சிறந்த கருத்துக்களைவிதைத்து, சிரிப்பு என்னும் பயிரை வளர்த்தவர் கலைவாணர் என்ற சிறப்புபட்டத்தை பெற்ற திரு. என். எஸ். கிருஷ்ணன் அவர்கள். கிருஷ்ணன் அவர்கள்இந்த முயல், ஆமையை இவ்வாறு பள்ளி மாணவர்களுக்கு கூறுகிறார். முயல், ஆமையில் எது ஜெயித்தது என்று பள்ளி மாணவர்களிடம் கேட்டார். ‘ஆமைஜெயித்தது, முயல் தோற்றதுஎன்றனர் மாணவர்கள். கலைவாணர் பதில், அதைஅப்படிச் சொல்லக்கூடாது. முயல் ஆமையால் தோற்றது (முயல் + ஆமையால்தோற்றது. முயல் + ஆமை = முயலாமை). முயலாமை என்பது முயற்சிசெய்யாமை. முயற்சி இல்லாதவர்கள் வலிமையுடையர்களாக இருந்தாலும்தோற்றுத்தான் போவார்கள்.

கட்டுப்பாட்டுடன் ஒன்றை செய்வதும், தவறு நடந்த பிறகு வருந்துவதும் மிகவும்வேதனை தருபவை. பலருக்கு இவ்விரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கவாய்ப்பு இருக்கிறது. இதில் எது அதிகம் வேதனை தருவது என்று நீங்கள்ஊகித்துக் கொள்ளுங்கள்.

கட்டுப்பாடுபழக்கத்திற்கு கஷ்டமாகினும் வாழ்க்கைக்கு முறையான வெற்றிதரும் சக்தியாகும்.

Friday, November 20, 2009

வெறுமை -வாழ்க்கையில் தவிர்ப்போம்


நம்மில் பல பேருக்கு நாம் என்ன செய்கிறோம் ,,நமது வாழ்கையின் நோக்கம் என்ன என்பது தெரிவதில்லை .ஏதோ பிறந்தோம்..ஏதோ வளர்கிறோம் என்றே நினைத்து ஒவ் வொரு நாளையும் கடத்தி கொண்டிருக்கிறோம் .சிலர் இன்னும் விரக்தியாக வாழ்கையே வெறுமையாக இருகிறதே என்று சொல்பவர்களாக இருப்பதையும் பார்க்க முடிகிறது .வாழ்கையே வெறுமையாக இருக்கிறது என்றால் அவர்களால் வாழபடும் வாழ்கையில் திருப்தி இல்லை என்றே அர்த்தம் கொள்ள வேண்டிஇருக்கிறது.நாம் வாழுகின்ற வாழ்க்கை மகிழ்ச்சி உடையதாய் அமையவேண்டும் .அந்த மகிழ்ச்சியால் வருகின்ற பலன்களால் உங்கள் மனதின் வெறுமையை களையவேண்டும் .
ஒரு ஊரில் ஒரு சோம்பேறி இருந்தான் .அவன் எந்த வேலையும் செய்யமாட்டான் .சாப்பிடுவது தூங்குவது என்று தினவும் பொழுதை கழிப்பான்.அவனுடைய வயதான பாட்டி ஏதோ கூலி வேலை செய்து அவனுக்கு சாப்பாடு போட்டு கொண்டிருந்தாள் .திடிரென பாட்டி உடம்பு முடியாமல் படுத்த படுக்கையானாள்.சோம்பேறிக்கு சாப்பாடு போட ஆளில்லை .அப்போது அந்த ஊரில் ஒரு துறவி வந்து உபதேசம் செய்து கொண்டிருந்தார் .அப்போது அந்த ஊர்மக்கள் அந்த சோம்பேறியிடம் உனக்கு சாப்பாடு போட யாருமில்லை .நமது ஊரில் ஒரு சக்திவாய்ந்த துறவி ஒருவர் வந்திருக்கிறார் .நீ அவரை சென்று தரிசித்தால் உனக்கு ஆயுள் முழுக்க சாப்பாடு கிடைக்கும்.அவனும் சரி என்றபடி துறவியை பார்க்க புறப்பட்டான் .துறவி இவனை பார்த்து "மகனே உனக்கு என்ன வேண்டும் " என்றார் .

"சாமி எனக்கு காலம் முழுக்க வேலை செய்யாமல் சாப்பிடவேண்டும்" என்றான். "சரி மகனே அதற்கு முன்னால் நீ ஒன்று செய்யவேண்டும் .நான் உன்னிடம் ஒரு சின்ன மூடையை தருகிறேன் .நீ இதை தூக்கிகொண்டு இரண்டு மைல்கள் நடக்க வேண்டும் "என்றார்.சோம்பேறிக்கு மூடையை தூக்கி நடப்பதற்கு கஷ்டமாக தான் இருக்கும் .இருந்தாலும் காலம் முழுக்க சாப்பாடு கிடைக்கும் என்று ஒப்புகொண்டான் .

துறவி அவனுக்கு தெரியாமல் அந்த மூட்டையில் பலவிதமான தாவரங்களின் விதைகள் மற்றும் நெல் தானிய விதைகளை நிரப்பினார் .அந்த மூட்டையில் சிறு சிறு துவாரங்களை போட்டார் .பிறகு அந்த மூடையை சோம்பேறியிடம் கொடுத்தார் .அவனும் இரண்டு மைல் நடந்து விட்டு மீதி விதையுடன் மூட்டையை திருப்பி கொடுத்தான் ."சாமீ எப்போது எனக்கு சாப்பாடு கிடைக்கும் "என்று கேட்டான் . "போய் இரண்டு மாதம் கழித்து வா " என்றார் துறவி .

இரண்டு மாதம் கழித்து மீண்டும் துறவியை பார்க்க வந்தான் சோம்பேறி.அப்போது துறவி "நீ அந்த மூட்டையுடன் சென்ற வழியை பார்த்துவிட்டு வா "என்றார் துறவி .அவனும் துறவி சொன்னபடியே அந்த வழியே நடக்க தொடங்கினான் .அப்போது அவன் சென்ற வழிகளில் சில செடிகள் பூத்து குலுங்கி இருந்தன.அந்த பூக்களில் அமர்ந்து தேனீக்கள் தேன் குடித்து கொண்டிருந்தன.புல் பூண்டுகள் முளைத்து இருந்தன .அந்த புற்களை மாடு மேய்ந்துகொண்டிருந்தது .ஆனால் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை .

திருப்பி துறவியிடமே திரும்பினான் அவன் .அவன் கோபமுடன் துறவியை பார்த்து "நீர் எம்மை அவமான படுத்துரீர் " என்றான்

துறவி சாந்தமாய்"மகனே நீ அன்று மூட்டை தூக்கி சென்ற இடமெல்லாம் வளர்ந்த தாவரங்களால் எவ்வளவோ உயிர்கள் வாழ்கின்றன.வாழ்வதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் .உனது வாழ்க்கை வெறுமை ஆகிவிடக்கூடாது .உனக்காக இல்லாமல் பிற உயிர்களுக்காக வாழ்.உனக்கு நிச்சயம் சாப்பாடு கிடைக்கும் " என்றார் .துறவியின் அறிவுரையால் திருந்திய சோம்பேறி இனிமேல் உழைப்பது என்றும் தனது பாட்டியை பராமரிப்பது என்றும் முடிவு செய்தான்.

எனவே வாழ்க்கை என்பதை வெறுமையாக நினைக்க வேண்டாம் .மற்றவர்க்கு தீமை செய்யாமல் முடிந்த அளவு நன்மை செய்தால்வெறுமையானவாழ்க்கையும் நிறைந்த வழக்கையாய் பூத்து குலுங்கும் ..வாழ்த்துகள் ...

Thursday, November 19, 2009

ஆன்மீக வியாபாரிகள்

ஒரு ஜென் குரு ஒவ்வொரு நாள் மதியமும் தூங்கி ஓய்வெடுப்பார். சீடர்கள் அவர் எழுந்ததும் ஏன் தூங்கினீர்கள் ஐயா என்று கேட்டார்கள். குரு விட்டுக் கொடுக்காமல், "நான் தூக்கத்தில் கனவுலகிற்குச் சென்று அங்கு இருக்கும் முன்னோர்களிடம் பாடம் கேட்டு வருகிறேன்" என்று சொன்னார்.

ஒரு வாரம் கழித்து வகுப்பில் ஒருவன் தூங்கிக் கொண்டிருக்கக் கண்டார். ஏன் தூங்கினாய்? என்று கேட்டதற்கு அவனும், "நான் தூக்கத்தில் கனவுலகிற்குச் சென்று முன்னோர்களிடம் பாடம் கேட்டுக் கொண்டிருந்தேன்" என்றான். குரு,"என்ன கேட்டாய்?" என்றார்.

சீடனும், "எங்கள் குரு தினமும் வருகிறாரா?" என்று கேட்டேன். அவர்கள், "நீங்கள் யாரென்றே தெரியாது என்கிறார்களே!?" என்றான்!

ஆன்மீக குரு சொல்வதையெல்லாம் கேட்டு ஆட்டுமந்தைக்கூட்டம் போல அவர்கள் பின்னால் செல்லாமல், அவரின் இந்த வளர்ச்சிக்கு காரணம் என்ன என்பதை உங்களுக்குள்ளே தேடிப்பாருங்கள். அவரின் வளர்ச்சிக்கு நீங்கள்தான் காரணம் என்பதை புரிந்துகொள்வீர்கள்.

ஒரே கடன் பிரச்சனை, குடும்பத்தில் நிம்மதியில்லை, உடலில் நோய் ஒன்று போனால் மற்றொரு நோய் வருகிறது. மன அழுத்தம் அதிகரிக்கிறது, சர்க்கரை நோய் அதிகரிக்கிறது, மன நிம்மதியே இல்லை. மருத்துவரும் கை விரித்துவிட்டார். அடுத்து என்ன செய்வதென்றே தெரிய வில்லை என்பவர்கள் நிம்மதியான வாழ்விற்கு திரும்ப ஒரே வழி ஆன்மீகம். பக்தர்களுக்கு மட்டுமல்ல பக்தர்கள் வழிபடும் ஆன்மீக குரு நிம்மதியாக வாழ வேண்டும் என்றாலும் ஆன்மீகம் தான் ஒரே வழி. ஏனெனில் பக்தர்கள் அந்த குறிப்பிட்ட குருவிடம் செல்வதை நிருத்தி விட்டார்களானால் அந்த ஆன்மீக குருவும் நிம்மதியிழந்து, உடல் நோய்களெல்லாம் ஏற்பட்டு சராசரி பக்தனின் நிலையை அடைந்து இறந்து போவார். ஆன்மீக குரு மரம் என்றால் அதற்கு தேவையான நீர், உரம் எல்லாமே பக்தர்கள்தான். பக்தர்களை நம்பித்தான் ஆன்மீக குரு வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் ஆன்மீக குருவை நம்பி பக்தர்கள் வாழ்வது போன்ற பிரம்மையை ஏற்படுத்தியுள்ளார்கள்.

அமைதியின் உறைவிடம்:

அங்கே நீங்கள் சென்றிருக்கின்றீர்களா! அருமையான இடம், அங்கு போனாலே மன நிம்மதியாக இருக்கும். மலையடிவாரத்தில் இயற்கை சூழலில் எவ்விதமான சத்தமுமில்லாமல் எவ்வளவு அமைதியான இருக்கும் தெரியுமா! என பக்தர்கள் சிலாகித்து பேசிக்கொள்வது வழக்கம். இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை, பொதுவாகவே எல்லா ஆன்மீக குருவிடம் இப்படி ஒரு இடம் அதாவது ஆசிரமம் இருக்கும். யாரும் கண்டு கொள்ளாத மலையடிவார இடமாகப்பார்த்து மொத்த இடத்தையும் வளைத்துப்போட்டு அற்புதமாக ஒரு அசிரமம் கட்டுவார். கொஞ்ச நாளைக்கு பிரபலமாகும் வரை சில ஆன்மீக சொற்பொழிவுகள், சில தியான முறைகள், அந்த தியான முறைகளால் நோய் தீர்ந்தவர்கள் என்ற சில பக்தர்களின் பேட்டிகள் இது போதும். அந்த ஆன்மீக குருவின் வம்சமே சந்தோஷமாக வாழும். பட்டம் விடும் போது குறிப்பிட்ட உயரம் செல்லும் வரை பட்டம் மேலே ஏறுவது கீழே இறங்குவதுமாக இருக்கும். குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும் பட்டம் கீழே இறங்காமல் நிலையாக நின்றுவிடும் சிறுவர்கள் இதை மேல் காற்று என்பார்கள். அப்படித்தான் ஆன்மீக குருக்களின் வாழ்வும் கொஞ்சம் முயற்சி செய்து பிரபலமடைந்து விட்டால் போது அதற்கு பிறகு அவர் செய்ய வேண்டியது எதுவுமில்லை.

வியாபார வித்தை:

வியாபாரத்தை பெருக்குவது எப்படி என்று பல பல்கலைகழங்களில் பட்டப்படிப்பு முடித்தவர்களே முழிபிதிங்கியிருக்கும் போது. இந்த ஆன்மீக குருக்கள் மிக எளிதாக வியாபாரத்தை செய்து முடித்துவிடுகிறார்கள். மிகச்சிறந்த எழுத்தாளரின் புத்தங்கள் கூட கனிசமான அளவே விற்பனையாகிறது. ஆனால் ஆன்மிக குருவின் உபதேசங்கள் அடங்கிய புத்தங்கள் பெருமளவு விற்று தீர்ந்துவிடுகிறது. புத்தகம் விற்பது, இவர்களின் புகைப்படம் விற்பது, இவர்களின் படம் இருக்கும் பேனா விற்பது, இவர்களின் சொற்பொழிவுகள் அடங்கிய ஆடியோ, விடியோ சிடிகள் என அனைத்தையும் எளிதாக விற்று காசு பார்த்துவிடுகிறார்கள். இது போதாதென்று இவர்களின் ஆன்மிகத்தன்மையை சந்தைப்படுத்துவதற்கென்று சிஷ்யக் குழுக்கள் உண்டு. இவர்கள் பல புதிய பக்தர்களை கூட்டி வருவதற்கும். ஆன்மீக குருவின் விற்பனைப் பொருற்களை விற்பதற்கும் பயன்படுபவர்கள். சமீபத்தில் ஒரு ஆன்மீக குருவின் சிஷ்ய குழு ஒன்றை சந்திக்க நேர்ந்தது. சிறிது நேரம் ஆன்மீகம் சம்பந்தமாக பேசிவிட்டு அவர்களுடைய தியான முகாமில் கலந்துகொள்ளச் சொன்னார்கள். நுழைவுக்கட்டணமாக ரூபாய் 700 செலுத்த வேண்டும் என்றார்கள். இப்படி எவ்வளவு 700 ரூபாய்க்கள்! இது தவிர வெளிநாட்டு பக்தர்கள் கொடுக்கும் பணம் என்று வாரி குவிக்கிறார்கள். இதற்கெல்லாம் வரியும் கட்டவேண்டியதில்லை காரணம் இவையெல்லாம் சேவை சார்ந்த அமைப்புகள். அடடா என்ன ஒரு ராஜ வாழ்கை, ராஜாவிற்குகூட சில பொருப்புகள் இருக்கும் இவர்களுக்கும் அதுவும் கிடையாது.

வார்த்தைகளின் சக்தி:

அவருடைய முகம் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது தெரியுமா! அவருடைய கண்கள் அமைதியின் உருவமாக திகழ்கிறது. அவர் பேசும் போது எவ்வளவு நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக அனுபவித்து பேசுகிறார் என்று தெரியுமா! அவரிடம் பேசிக் கொண்டிருந்தாலே நம்முடைய மன பாரம் குறைந்துவிடும் என்று ஆன்மீக குருவை நேரில் கண்ட பக்தர்கள் சிலாகித்து சொல்வது வழக்கம். உழைக்காமல் குவிகிறது பணம் அதற்கு வரி பிரச்சனையில்லை, சொகுசான இருப்பிடம், நேர நேரத்திற்கு சத்தான உணவு வகைகள் கிடைத்தால் யார் வேண்டுமானாலும் அந்த ஆன்மீக குருவைப்போல பிரகாசமான முகத்தையும், எவ்வித அவசரமுமில்லாமல் ஒவ்வொரு வார்த்தையாக ரசித்து ரசித்து அமைதியாக பேச முடியும். எனவே மரம் பசுமையாக செழிப்பாக இருக்கிறதே என்று வாய் பிழக்க வேண்டாம். அதற்கு தேவையான நீரும் உரமும் எங்கிருந்து வருகிறது என்பதை ஆன்மீக குருவின் தோற்றத்தில் மயங்குபவர்கள் சிந்திக்க வேண்டும். ஆன்மீக குருக்கள் சொல்லும் தத்துவங்கள் எதுவும் புதிதல்ல ஏற்கனவே நாம் அறிந்த விசயங்கள்தான் அவற்றை புத்திசாளித்தனமாக மக்களை கவரும் விதத்தில் பேசுவது அவர்களின் திறமை. மற்றபடி விஷயம் ஏற்கனவே நாம் அறிந்ததுதான். நாம் உருப்பட வேண்டும் என்று விரும்பினால் நமக்கு தெரிந்த நல்ல விசயங்களை பின்பற்றினாலே போதுமானது.

நீரை நிருத்துங்கள்:

ஆன்மீக குருவிற்கு கொடுக்கும் பணத்தை நிருத்திப் பாருங்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட பொருற்களை கொள்முதல் செய்வதை உடனே நிருத்திப்பாருங்கள். அப்படி செய்தீர்களானால் ஆன்மிக குரு நிலைகுழைந்து போய்விடுவார். அதற்கு பிறகு அவரிடம் தத்துவம் பேச சொல்லிப்பாருங்கள். ஒரு தத்துவமும் அவருக்கு நினைவிற்கு வராது. விலைமதிப்பான ஆடைகள் அணிய முடியாது. சொகுசான கார்கள் வைத்துக்கொள்ள இயலாது, விமான பயணம் செல்ல முடியாது, சத்தான உணவு கிடைக்காது. கிட்டத்தட்ட ஒரு பிரச்சனைக்குறிய பக்தனின் முகம் எப்படி இருக்குமோ அந்த நிலமைக்கு அந்த ஆன்மீக குரு வந்துவிடுவார். பிறகு அவரை சரி செய்ய வேறொரு ஆன்மீக குரு வர வேண்டியிருக்கும். மோசமான பொருற்களை விற்று சம்பாதிப்பவனை வீட மோசமானவர்கள் இவர்கள் ஏனெனில் இவர்கள் அந்த மோசமான பொருற்களை கூட கொடுக்காமல் சத்தமில்லாமல் ரத்தம் உறுஞ்சும் அட்டைப்பூச்சியைப்போல மக்களிடம் பணம் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு இருக்கும் பிரச்சனையில் நின்று யோசிக்க அவர்களால் இயலாது. பிரச்சனையில் இருந்து வெளியேறிவிட்டால் போதும் என்ற சிந்தனையில் அவர்கள் இருப்பதால். அவர்களால் இதை உணர முடியாது. சரி மக்கள் பணம் கொடுக்கிறார்கள் அதனால் அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் அதோடு நிருத்திக்கொள்கிறார்களா தேடி வரும் பெண்களை கற்பழிப்பது, குழந்தைகளை பல காரணங்களுக்காக கொல்வது, கடத்துவது என பல அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்கிறார்கள். யாராவது குற்றம் சாட்டும் வரை அனைவருமே நல்ல அன்மீக குரு போலத்தான் இருப்பார்கள். ஆன்மீக குருக்கள் உருவாக மக்கள்தான், மக்களின் பணம் தான் காரணம் அதை மக்கள் நிருத்த வேண்டும், திருந்த வேண்டும். பிறகு ஆன்மீக குருக்கள் தோன்ற மாட்டார்கள்.

முக்தியின் வழி:

உங்களின் அன்பிற்கினிய ஆன்மீக குரு இவ்வளவு சிறப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அதற்கு நீங்கள் கொடுக்கும் பணம் மட்டுமே காரணமே தவிர வேறு எந்த தத்துவமும் காரணம் இல்லை. பணமே ஆதார தத்துவம் அவர்களுக்கு. அவர்களுக்கு பணம் கொடுப்பதைவீட அதை சேமித்து, குடும்பத்திற்கு போதுமான அளவு பணத்தை நீங்கள் சம்பாதித்தால் நீங்கள் தேடும் மன அமைதி, நிம்மதி எல்லாம் உங்கள் வீடு தேடி வரும் அதை விட்டு விட்டு நிம்மதியை தேடும் முயற்சியில் ஒரு சோம்பேறியை கோடிஸ்வரன் ஆக்காதீர்கள்.

நன்றி:பா.பூபதி ,திண்ணை

Wednesday, November 18, 2009

பணிவு கொள் -உயர்வு கொள்வாய்


பணிவு கொள் -உயர்வு கொள்வாய்

நம்மில் பல பேருக்கு பணிவு என்றால் என்ன ?என்பதே தெரிவதில்லை .நான் சிலரை பார்த்து இருக்கிறேன்.எனது தினசரி அலுவலக ரயில் பயணத்தில் சிலர் தன்னை விட வயதுக்கு பெரியவர்கள் காலை மிதிப்பார்கள் .வேண்டுமென்றே மிதிப்பவர்களும் உண்டு .தெரியாமல் மிதிப்பவர்களும் உண்டு .மும்பை போன்ற நகரங்களில் இது தவிர்க்க முடியாது என்பது உண்மை .ஆனால் ஒரு சாரி சொல்வதற்கு அவர்கள் யோசிப்பார்கள்.மிதி வாங்கியவர் கோபத்துடன் பார்ப்பர்.ஒரு சாரி சொல்லிவிட்டால் மிதி வாங்கியவர் முகத்தில் ஒரு புன்னகை தவழும் .இந்த சாரி எல்லாம் கடைக்கு சென்று விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை .எல்லோரிடமும் இருக்கிறது .நாம் அதை சரியாக சொல்லவேண்டிய இடத்தில் சொல்லவேண்டும் .தவறு மேல் தவறு செய்துவிட்டு சாரி சாரி என்று சொல்லுவதால் அடுத்தவர்களிடம் நம்மை பற்றிய நல்லெண்ணம் போய்விடும் .ஒருதடவை தவறு செய்துவிட்டு அதை திருத்தி கொள்வதே அறிவுடைமை .

ஜென் குரு ஒருவர் மல்யுத்த வித்தையிலும் சிறந்து விளங்கினர். அந்தப் பகுதியில் அவரை மல்யுத்தத்தில் வெல்ல யாரும் இல்லை என்னும் வண்ணம் பெயர் பெற்றிருந்தார். அந்த ஊருக்கு வயதில் இளைய மல்யுத்த வீரன் ஒருவன் வந்தான். குருவை மல்யுத்தத்தில் வீழ்த்துவேன் என்று அனைவரிடமும் சூளுரைத்தான். உடல் வலிமை மட்டுமன்றி தந்திரத்திலும் சிறந்து விளங்கியவன் அவன். அவனுடன் மோதுபவர்களின் அசைவுகளை நன்கு கவனித்து முதலில் அவர்களை இயங்கவைத்து எதிரியின் பலவீனத்தைக் குறித்துக் கொண்டு அவர்களை அடித்து வீழ்த்தும் தந்திரத்தைக் கையாண்டு அனைத்துப் போட்டிகளிலும் வெற்றியையே சந்தித்து வந்தான்.

அவனை எதிர்த்து யாராலும் வெல்ல முடியவில்லை.
தன்னுடைய சீடர்களின் அறிவுரைகளை மீறி குரு அந்த இளைஞனுடன் மல்யுத்தப் போட்டியில் கலந்து கொள்ள முன்வந்தார். போட்டி துவங்கியது. இருவரும் எதிரெதிர் நின்றதும் இளைஞன் குருவை நோக்கி மிகவும் மோசமான வசவுகளால் திட்டத் துவங்கினன். அவருடைய முகத்தில் மண்ணை வாரித்தூற்றிக் காரி உமிழத் துவங்கினன். நீண்ட நேரம் அவரைத் தூற்றிக் கொண்டே இருந்தான்.

குருவும் ஒன்றும் சொல்லாது அவன் எதிரில் வெறுமனே கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தார். இளைஞனின் திட்டுதல் மணிக்கணக்கில் தொடர்ந்து ஒருவழியாகக் களைப்படைந்து ஓய்ந்து கீழே சரிந்து விழுந்தான்.
சீடர்கள் அனைவரும் குருவைச் சூழ்ந்து கொண்டனர்.

"உங்களை இவ்வளவு தூற்றியும் அவமானப் படுத்தியும் நீங்கள் ஏன் அவனை அடித்து வீழ்த்தாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தீர்கள்?'' எனக் கோபத்துடன் வினவினர்கள்.


குரு புன்னகையுடன் கேட்டார், "நீங்கள் யாருக்காவது பரிசளிக்க ஏதாவது பொருளை எடுத்துப் போகிறீர்கள். அந்த நபர் அப்பரிசை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அந்தப் பொருள் யாருடைய உடமையாக இருக்கும்?''


பணிவுடன் நடப்போம் ...மற்றவர் இதயத்தில் சிம்மாசனம் போட்டு உட்கார்வோம்....அப்புறம் நீங்களும் பெரிய மனிதர் தான் ....
--

Tuesday, November 17, 2009

போராட்டம் -வெற்றியின் ரகசியம்


போராட்டம் -வெற்றியின் ரகசியம்

வாழ்க்கையில் நாம் எப்படிச் சோதனைகளை எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அவை தோல்வியாகவோ அல்லது வெற்றியாகவோ அமையலாம். ஆனால் முயற்சி இல்லாமல் வெற்றி வருவதில்லை.அந்த வெற்றியை பெற நாம் தெளிவான சிந்தனையுடன்,குறிகோளுடன் செயல்பட்டால் தான் வெற்றி கனியை பறிக்க முடியும் .அந்த வெற்றிக்கனியை பறிக்க போராட்டம் நிச்சயம் தேவை .

ஒரு உயிரியல் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு ஒரு கம்பளிப் புழு எப்படி வண்ணத்துப் பூச்சியாக மாறுகிறது என்று சொல்லிக் கொண்டு இருந்தார். அவர் தனது மாணவர்களிடம் ஒரு வண்ணத்துப் பூச்சி கூட்டினைக் காட்டி அடுத்த ஒரு சில மணி நேரங்களில் வண்ணத்துப் பூச்சி தனது கூட்டிலிருந்து போராடி வெளிவரப்போகிறது என்றும் ஆனால் யாரும் அதற்கு உதவக்கூடாது என்றும் கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்.

மாணவர்களில் ஒருவன் அதன் மேல் இரக்கப்பட்டான். தனது ஆசிரியரின் சொல்லை மீறி, அந்த வண்ணத்துப் பூச்சி தனது கூட்டிலிருந்து வெளிவர உதவுவதற்குத் தீர்மானித்தான். அந்த வண்ணத்துப் பூச்சி போராட தேவையின்றி எளிதாக வெளியே வரும் பொருட்டு அந்தக் கூட்டை உடைத்தான். ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு வண்ணத்துப் பூச்சியும் இறந்து விட்டது.

இப்பொழுது அந்த மாணவன் வண்ணத்துப் பூச்சியின் இறப்பிற்கு காரணமாகி விட்டான். கூட்டிலிருந்து வெளிவரப் போராடும் போராட்டம் உண்மையில் அதனுடைய சிறகுகளை வளர்க்கவும், தன்னை பலப்படுத்திக் கொள்ளவும் உதவும் என்பது தான் இயற்கையின் சட்டம். மாணவன் அந்த வண்ணத்துப் பூச்சியயை போராட்டத்தில் இருந்து காப்பாற்றி விட்டதால், அது இறந்து விட்டது. இதே கொள்கையை நமது வாழ்விற்கும் பயன்படுத்துங்கள். போராட்டங்கள் இல்லாமல் வாழ்வில் எதுவுமே பயன்தராது.

ஆகையால் சிறந்த குறிகோளுடன் அதை எட்டிபிடிக்க கடுமையாக போராடுவோம் ...வெற்றி தேவதை வெற்றி கனியுடன் நமது இல்லம் தேடி வருவாள்....நண்பர்களே ...வாழ்த்துக்கள் ..

Monday, November 16, 2009

மனதை ஆய்வு செய்தல் -நல்ல எண்ணங்களை மனதில் விதைப்போம்


மனதை ஆய்வு செய்தல்

மனதை பற்றி பலதரப்பட்ட ஆராய்சிகள் நடந்துள்ளன .ஒரு மனிதன் நல்லவனாக இருப்பதும் கெட்டவனாக வளர்வதும் அவனுடைய வளர்க்கப்படும் சூழ்நிலையே என்பது மனவியல் நிபுணர்கள் கருத்து.ஒரு மனிதனுக்குள் வன்முறை என்பது எப்போதும் தூங்கி கொண்டு இருக்கும்.அது எதாவது ஒரு ரூபத்தில் வார்த்தைகளாக அல்லது தாக்குதலாக வெளிவருகிறது என்பதும் அவர்கள் ஆராய்ச்சி முடிவு .ஆனால் அப்படிப்பட்ட மனதையும் மிகவும் அழகான நறுமணம் வீசும் தோட்டமாக ஆன்மிகத்தின் மூலவும் யோக போன்ற பயிற்சிகளின் மூலவும் மாற்ற முடியும் என்பது ஆன்மிகவாதிகளின் கருத்து .

மனதை பற்றி ஆய்வு செய்ய அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஏசலன் என்ற நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி வன்முறையைய் மிகவும் விரும்பும் மனம் கொண்டவரின் கண்களை கட்டி விட்டு, எதிரில் தலையணையைய் வைத்து இதை எதிரி என்று நினைத்து குத்தச் செய்தது. முதலில் குத்த நினைத்த மனிதர் பிறகு சற்று யோசித்து சிரித்தார்… தலையணையைய் எப்படி குத்துவது? என்று. இந்த தலையணைக்கும், ரத்தத்தில் உருவான மனிதனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று கூறியவுடன் அந்த மனிதன் தலையணையைத் தாக்க முற்பட்டான். அதைக் கண்டு அவரைச் சுற்றி நிற்பவர்களே ஆச்சிரியப்படும் வண்ணம் அவன் அடிக்கும் வேகம், அடிக்கும் விதம், தலையணையைக் கிழித்தல் போன்ற செயல்கள் வியப்பை உண்டு பண்ணின. பரிசோதனையின் பின் அவ்வாறு அடித்தவரின் மனம் மிக இலேசாகிவிடுவதை உணர்ந்தார்கள். அவர்களது மனம் இதற்கு முன் இவ்வளவு இலேசாக ஒரு போதும் இருந்ததில்லை.

வன்முறை தோன்றும் போது அதை யாரை நோக்கியாவது வெளிவிடச் செய்யலாம். அப்போது அது முழுதும் தீர்ந்துபோகும். உதாரணமாக, வன்முறையைய் காற்றிடம் காற்றலாம். ஏனெனில் அது எதிர்க்காது. அதுவே மனிதரை நோக்கி வெளிபடுத்தினால் பதிலடி பெற நேரிடும். என்னால் குத்தப்படுபவனே என்னை நோக்கி குத்துவான். அவன் இன்றோ, நாளையோ அல்லது எதிர்காலத்திலோ தாக்கலாம். அவன் காத்திருக்கலாம். கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக திருப்பித்தாக்கலாம்.ஒருவரை அடிக்கும் போது, பின்னால் அதற்காக வருத்துதல் மட்டுமின்று இன்னொரு தாக்குதலுக்கு பதிலடி தரவும் தயாராகிறோம். இவ்வாறு வன்முறை ஒரு விஷ மட்டத்தை உருவாக்குகிறது.

“நமது பகைமையைய் காற்றிடம் காட்டலாம். தலையணையிடம் காட்டலாம்.
அவை நம்மை எதிர்க்காது. நமக்கு மற்றொருவரின் பகைமையைய் உருவாக்காது”.

நமது மனதை திடபடுதுவோம் .நல்ல எண்ணங்களை விதைப்போம் ....விதைகள் நறுமணம் வீசும் பூக்களாக மலரட்டும் ...வாழ்த்துக்கள்

Saturday, November 14, 2009

ஆசையின் அழிவு

ஆசையே துன்பத்துக்கு காரணம் என்றார் கௌதம புத்தர்.ஆனால் நாம் நமக்கு தேவையானவற்றின் மீது அளவோடு ஆசை கொள்ளவேண்டும்.அதிகமான ஆசை நமது நற்பண்புகளை சிலநேரங்களில் அளவுக்கு அதிகமான ஆசை மழுங்கடித்துவிடும்
இந்த உலகில் பிறந்த உயிரினங்களில் சிறு பூச்சி முதல் மனிதன் வரை ஆசைக்கு அடிபணியாத உயிரினங்களே இல்லை என கூறலாம். அவ்வாறு ஆசைக்கு அடிப்பட்ட நாம் ஏதாவது ஒரு வகையில் நமது வாழ்க்கையை தொலைக்கிறோம். இதில் விலங்கினங்கள் ஏதாவதொரு (தனது) புலன்களின் ஆசையினால் மட்டுமே தனது வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றன. ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் ஐம்புலன்களாலும் வாழ்க்கையை தொலைக்கின்றான்.

உதாரணமாக, மீன் எதனால் அழிகிறது? தூண்டில் புழுவுக்கு ஆசைப்பட்டு வாயை திறந்து புழுவைச் சாப்பிடுகிறது. மரணம் மீனைச் சாப்பிடுகிறது.

வண்டு எதனால் அழிகிறது? நாசியன் நறுமணத்தால் பூவில் மயங்கிக்கிடக்கிறது. பூவோ கருவுற்று, காயாகும் நோக்கில் இதழ்கழை மூடி விடுகிறது. மூங்கிலைத் துளைக்கும் வலிய வண்டு, நாசியின் நறுமணச் சுவையில் மயங்கி மெல்லிய பூவைக் கூடத் துளைக்க முடியாமல் உள்ளேயே கிடந்து சாகிறது.

அசுணமா என்றொரு பறவை. நல்ல இசை என்றால் அதற்கு நாட்டம். வேடுவர்கள் புல்லாங்குழல் எடுத்து வாசிக்கும் போது, இசைக்கு மயங்கி அவர்கள் தலைக்கு மீது வட்டம் இடும். வேடுவர்கள் உடனே கீழே நெருப்பை மூட்டி, பறை என்ற தோல் கருவியை எடுத்து தாருமாறாகத் தட்டியவுடன் நெருப்பில் விழுந்து வேடுவர்க்கு உணவாகி விடுகிறது. காது அதன் அழிவிற்கு காரணம்.

விட்டில் பூச்சி ஏன் அழிகிறது? கண் தான் காரணம். நெருப்பை பார்த்ததும் அதன் அருகில் சென்று நெருப்பிலேயே விழுந்து இறந்து விடுகிறது. கண்ணால் அழிகிறது விட்டில் பூச்சி.

யானைக்கு அழிவு எதனாலே? யானையைய் பிடிப்பவர்கள் காட்டிலே பழக்கிய பெண் யானையை தொலைவில் நிறுத்துவார்கள். அதன் அருகில் பள்ளம் வெட்டி இலை தழைகளைப் போட்டு இலேசாக மூடி வைப்பார்கள். காட்டில் அலையும் ஆண் யானை, மெய் இன்பம் என்ற உடல் சுகம் கருதி பெண் யானையை நோக்கி வரும். வழியில் பள்ளத்தில் விழுந்து மனிதர்களிடம் மாட்டிக் கொள்ளும். பிறகு தன் வாழ்நாள் முழுவதும் மரம் இழுத்து மனிதன் இடும் பணிகளைச் செய்து துன்பம் அடையும். மெய் என்ற சரீர ஆசையே யானையின் அழிவுக்கு காரணம்.

கண்ணாலே விட்டிலும், காதாலே அசுணமா பறவையும், நாசியால் வண்டும், வாயால் மீனும், மெய்யாலே யானையும் அழிகிறது. ஆனால் மனிதனோ இந்த ஒவ்வொரு புலன்களாலும் அழிவைத் தேடுகிறான். இப்படி ஐம்புலன்களாலும் அழிவைத் தேடுவதற்கு மூலக்காரணம் ஆசை என்னும் மனதை அடக்காமையே. ஆசை இல்லாமல் இருக்கவே முடியாது. ஆனால் ஆசைக்குள் நாம் முழுமையாக சிக்கிக் கொண்டால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.

ஆசையைய் பற்றிய ஆசையைய் துறந்தோர் கூறும் அறிவுரைகள்:
புத்தர்… ஆசையே துன்பத்திற்கு காரணம்.

இராமகிருஷ்ணர்…நமக்குள் ஆசை இருக்கலாம். நாம் ஆசைக்குள் சிக்கிவிடக்கூடாது. ‘படகு தண்ணீருக்குள் இருந்தால் ஆபத்து இல்லை. படகுக்குள் தண்ணீர் புகுந்து விட்டால் ஆபத்து தவிர வேறு எதுவும் இல்லை.
ஆசையின் கொடுமை, அதை அடையும் வரை ஆர்வம் இருக்கும். அடைந்ததும் நிறைவு வராது.
ஆத‌லால் அள‌வான‌ ஆசைக‌ளோடு வாழ்ந்து சுக‌ம் பெருவோம்.

Friday, November 13, 2009

தற்பெருமை கொள்ளாதே

தற்பெருமை கொள்ளுதல் ஒரு மனிதனுடைய நல்ல குணநலன்களையும் கெடுத்துவிடும் .நிறை குடம் தழும்பாது என்பது ஒரு பழமொழி .எல்லாம் கற்று தெரிந்த ஒருவன் மிகவும் அமைதியாக இருப்பான்.ஏதோ அரைகுறையாக தெரிந்து கொண்டவன் எல்லாம் தெரிந்தது மாதிரி நடந்து கொள்வான் .நீ ஒரு செயலை முடித்து விட்டால் நீயாகவே உன்னை உயர்த்தி சொல்லக்கூடாது .உனது செயலை பற்றி மற்றவர்கள் பேசவேண்டும் .அதைவிட்டு நீயே பேசினால் அது தற்பெருமை .மற்றவர்கள் பேசினால் அது பெருமை .

விஞ்ஞானி ஒருவர், தன்னைப் போலவே அச்சாக பல மனிதர்களை உருவாக்கும் நுட்ப்பத்தைக் கண்டறிந்தார். அதன்படி அவர் உருவாக்கிய நகல்களுக்கும் அசலுக்கும் வித்தியாசமே தெரியவில்லை! ஒரு நாள், தன் உயிரைக் கவர்ந்து செல்ல எமதர்மன் வரப் போகிறான் என்பதை அறிந்தார் விஞ்ஞானி. ஏற்கனவே தான் உருவாக்கி வைத்திருந்த ஒரு டஜன் நகல் மனிதர்களுக்கு நடுவில் போய் நின்று கொண்டார்.
பூலோகம் வந்த எமதர்மன், உருவத்தில் விஞ்ஞானியைப் போன்றே இருக்கும் பதின்மூன்று பேரில் உண்மையானவர் யார் என்பதை அறிய முடியாமல் குழம்பிப்போனார். வெறுங்கையுடன் திரும்பினான். மரணத்தை வென்று விட்டதாகக் குதூகலித்தார் விஞ்ஞானி. இருப்பிடம் திரும்பிய எமதர்மன் நன்கு யோசித்தான். அவன் மனதில் ஒரு திட்டம் பளிச்சிட்டது. பாசக்கயிற்றுடன் பூலோகம் வந்தவன், விஞ்ஞானியின் இடத்தை அடைந்தான்.
''ஐயா! நீங்கள் பேரறிஞர்தாம். உங்களைப் போலவே ஒரு டஜன் உருவங்களைச் செய்து விட்டீர்கள். ஆனால். ஒரே ஒரு குறை...'' என்றான். விஞ்ஞானிக்குப் பொறுக்கவில்லை. ''என்ன குறை கண்டீர்?'' என்று எமதர்மனின் கைகளைப் பிடித்துக் கேட்டார். உடனே எமதர்மன், ''தற்பெருமை என்ற குறைதான். வாருங்கள் எமலோகத்துக்கு'' என்று விஞ்ஞானியை இழுத்துச் சென்றான்.

படிப்பாலும் கல்வியாலும் வருகிற அகங்காரம் மற்றவர்களின் அறிவால் இது வெறும் அறியாமையே என்று உணர்த்துகையில் தான் நாம் நம்மையே உணர்கிறோம்.

Thursday, November 12, 2009

நம்பிக்கை -சிறுகதை


அவன் பொறந்தது வளர்ந்தது எல்லாம் ஒரு கிராமத்தில் .அந்த கிராமம் பாரதிராஜா படத்தில் வரும் மாதிரி கோவணம் கட்டிக்கிட்டு கையில் ஒரு கம்புடன் கரிசல் காட்டில் நடந்து செல்லும் மனிதர்களை பார்த்தது இல்லை.எல்லோரும் நாகரிகம் தெரிந்தவர்கள ய் இருந்தார்கள் .அவன் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தான் அவள் வீட்டிற்கு மின்சாரம் வந்தது.
அவனுக்கு என்று எந்த குறிகோளும் இல்லை.வீட்டிற்கு மின்சார இணைபிற்கு மனு போட்டுவிட்டு மின்வாரிய பொறியாளரை சந்திக்க சென்றான் அவன்.
கடந்த ஒரு மாதங்களாக அவன் பலமுறை சந்தித்தும் இன்னும் மின்சாரம் கிடைத்த பாடில்லை. நினைத்தவுடன் அவரை பார்க்க முடியவில்லை.அவரை சந்திக்க காத்திருக்க வேண்டி இருந்தது.அவனுக்கு முன்னால் வெள்ளை வேட்டி சட்டையணிந்த அந்த ஊர் பெரிய மனிதரும் காத்து இருக்கிறார்.அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.அவர் அரசின் இலவச மின்சாரத்திற்காக தான் விண்ணப்பம் கொடுக்க வந்து இருக்கிறார் என்பதில் தெரிந்து கொண்டான் .நான் மட்டும் கொஞ்சம் நிலம் இருந்து அதில் விவசாயம் செய்ய இலவச மின்சாரம் தருவார்களா ? என்று தனக்கு தானே கேட்டு கொண்டான் .

பொறியாளரின் அறை கதவில் ராமகிருஷ்ணன் B.E,இளநிலை பொறியாளர் என்ற போர்டு தொங்கியது. அந்த போர்டு பார்த்தும் அவனுக்கு பெரிய மனிதரும் அந்த போர்டும் தான் அவனுக்கு இன்ஜினியரிங் படிக்கணும் என்ற ஆசையை உண்டாக்கியது .நாளைக்கு நாமும் இதே மாதிரி ஒரு பொறியியல் பட்டம் பெற்றால் இதே போல் பெரிய மனிதர்கள் தன்னை காத்திருந்து பார்ப்பார்களே என்ற ஒரு நப்பாசை தான் . ஒரு வழியாக சென்னையில் இன்ஜினியரிங் படித்து அரியருடன் நான்கு ஆண்டையும் முடித்துவிட்டான்.

அடுத்து அவனுடைய இலக்கான இளநிலை பொறியாளர் அவ்வளவு ஈஷி ஆக கிடைக்குமா ?அரியருடன் போனால் எவன் வேலை கொடுப்பான்..நண்பர்கள் நால்வராக சென்னை கொரட்டூரி ல் தங்கி வேலை தேட ஆரம்பித்தான்.அப்புறம் எதோ சிபாரிசில் ஒரு கம்பெனியில் மூன்றாயிரம் ரூபாயில் ஒரு வேலை கிடைக்க அவன்தான் ஹீரோ ஆகிவிட்டான் .ஏனென்றால் இவன் சம்பளம் அவனுங்களை விட அதிகம்.

"
உனக்கென்ன மச்சி நீ நம்மளை விட அதிகமா வாங்கிரியே" என்று சொன்னான் ஒருவன்.மற்றவன் "அவனுக்கு என்னடா இன்னும் கொஞ்சம் நாளில் எங்கயோ போக போகிறான் "என்றான் .

அவனுக்கு
கொஞ்சம் நாட்களில் அந்த வேலையும் பிடிக்காமல் போக அடுத்து போனது மார்கெட்டிங் வேலைக்கு . அதுவும் பிடிக்காமல் போக அவனுக்கு வாழ்க்கை பிடிப்பில்லாமல் ஆகி போனது

அவன் நண்பன் சொன்னது இப்போபோதுதான் புரிந்தது."பாவிபய எங்கேயோ போவான் என்று சொன்னது தெருகோடியை தானா "என்று மனதுக்குள் புலம்பினான் .இப்போது அவன் அரியர்ஸ் எல்லாம் பாஸ் செய்து விட்டு சூழ்நிலை கைதியாய் ஏதோ வேலை செய்து கனவுடன் நம்பிக்கையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறான் .

இதே போல் எத்தனையோ அவன்கள் சென்னை வீதிகளில் தமிழ் நாட்டின் மாவட்டங்களில் ஏதோ நினைத்து படித்து ஏதோ ஒரு வேலை பார்த்து சூழ்நிலை கைதியாய் குறுகிய வட்டத்துக்குள் அடைபட்டு கிடக்கிறார்கள் .தெளிவான சிந்தனை,கடுமையான முயற்சி,எதையும் பரிசோதனை செய்யும் திடமான நம்பிக்கை ஆகியவற்றுடன் முயன்றவர்கள் தோற்றதாய் எந்த சரித்திரமும் சொல்லவில்லை .