Thursday, March 3, 2011

கண்ணியமான தேர்தலுக்குக் களப்பணியாற்றுவோம்!-தினமணி கட்டுரை


2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டின் மூலம், ஊழல் ராஜாக்களும், ராணிகளும் பெற்ற ஆதாயங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பையும், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்துக்காக அரசு வழங்கும் மானியங்களையும் முடிச்சுப் போட்டுப் பேசுகிறார் பிரதமர் மன்மோகன்சிங்.

கூட்டணிக்கட்சி அமைச்சரும் கூட்டாளிகளும் வரலாறு காணாத முறைகேடுகளில் ஈடுபட்டாலும், தடுக்க முடியாததற்குக் காரணம் கூட்டணி தர்மம் என்று கூறி திருதராஷ்டிரர் அவதாரம் எடுக்கிறார் அவர். மிக மோசமான நிதி நிர்வாகத்தாலும், அதிக சம்பளச்சுமையாலும், வரலாறு காணாத இலவசப் போலிக்கவர்ச்சி ஜிகினா திட்டங்களாலும், கரைபுரண்டு ஓடும் ஊழல்களாலும், சாராய வருமானத்தையும் மீறி தமிழக அரசின் கஜானா காலியாகிவிட்ட நிலையில், எல்லா வகை புதிய திட்டங்களுக்காகவும் வெளிநாட்டு வங்கிகள், உலக வங்கி ஆகியவற்றிடம் தொடர்ந்து கடன் வாங்க வேண்டிய நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

நிதியமைச்சர் அன்பழகனோ, அரசின் தவறுகளை மறைத்துவிட்டு, ""தமிழகம் கடன்களால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது'' என்று ஒரு புரட்டான பொருளாதாரப் பாடம் எடுக்கிறார். தமிழக முதல்வரோ, ""ஏழைகள் இருக்கும்வரை இலவசங்கள் தொடரும்'' என்றுகூறி, தமிழக ஆண்மகனின் ஆடையை உருவிவிட்டு, கோமணத்தைக்கட்டி, கையில் ஒரு திருவோட்டையும் கொடுத்துக் கேவலப்படுத்துகிறார்.

தடித்த தோலுடனும், நரம்பில்லா நாக்குடனும் வளைய வரும் நம் இன்றைய தலைவர்கள், பொது வாழ்வில் ஒழுக்கக்கேட்டை நியாயப்படுத்துவதற்கும், மக்களை முட்டாள்களாகக் கருதி மமதையுடன் நடந்து கொள்வதற்கும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திச் சொத்து சேர்த்துக் கொள்வதற்கும் எப்படி முடிகிறது?

இவையெல்லாம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எனக் கூறப்படும் இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தை, கட்சியை, நாட்டின் வளங்களைத் தங்களது குடும்ப உறுப்பினர்களின் பிடியில் வெளிப்படையாகவே தொடர்ந்து வைத்துக் கொள்ளும் துணிவு, இந்த மக்களாட்சியில் இவர்களுக்கு எப்படிச் சாத்தியப்படுகிறது? வாரிசுகளால், வாரிசுகளுக்காக, வாரிசுகளைக் கொண்டு நடத்தப்படும் ஆட்சிமுறையை ஓட்டு அரசியல் மூலம் இன்றைக்கு எப்படி இவர்களால் சாதிக்க முடிகிறது? சிறிதும் கூச்சமின்றி, மக்களை அழிவுப்பாதைக்கு இட்டுச்சென்று கொண்டே, ஓட்டுகளையும் எப்படிப் பெற முடிகிறது?

இவற்றுக்கெல்லாம் காரணம் பெரும்பாலான இந்திய மக்களிடம் ஜனநாயகம் பற்றிய உண்மையான, ஆழமான புரிதலை ஏற்படுத்தவே இல்லை என்பதுதான். நீண்டகாலமாக மன்னர்களின் கீழும், ஜமீன்களின் கீழும், உயர்ஜாதிகளின் கீழும், பின்னர் வெள்ளையர்களின் கீழும், அடிபணிந்து வாழப்பழகியவர்கள் நம் மக்கள். அரசியல் விடுதலை கிடைத்துவிட்டாலும், பிரதிநிதித்துவ அரசியல் தத்துவத்தை அவர்கள் உள்வாங்கிக் கொள்ளவே இல்லை.

ஆதலால், அதிகாரம் என்பது மீண்டும் ஆதிக்க சக்திகளிடமே சிறைப்படுவதும், அதிகாரத்துக்கு வருபவர்கள் ஆதிக்க சக்திகளாக மாறுவதுமேதான் நடைமுறையானது. பண்டைய கிரேக்க அறிஞர் சாக்ரடீஸின் சீடரான ப்ளேட்டோ, ""மக்களாட்சி சீருடன் நடைபெற, அதற்கு முயற்சியும், தன்னொழுக்கமும், ஜனநாயகம் பற்றிய பல்வேறு நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ளும் விருப்பமும் மக்களுக்குத் தேவை. இதற்குப் பெரும்பாலான மக்கள் தயாராக இல்லாதபோது, அங்கு ஜனநாயகம் வீழ்ச்சி அடையும்'' என்கிறார்.

தமிழக அரசால் தொடர்ந்து மிகமோசமாக நிர்வகிக்கப்படும் ஆதிதிராவிடப் பள்ளிகளில் படிக்கும் சராசரி மாணவர், தரமான கல்வி கிடைக்காமல், பாடங்கள் பற்றிய குறைந்த அளவு புரிதல்கூட இல்லாமலேயே, தேர்வில் மட்டும் எப்படித் தேர்ச்சிபெற்று விடுகிறாரோ, அந்த அளவுக்குத்தான் வாக்குச்சாவடியை மக்கள் புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதனால்தான், ஜாதியையும், நோட்டையும், பிரியாணியையும், சாராயத்தையும் பயன்படுத்தி மோசமான அரசியல்வாதிகளால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது. தேர்தல் அரசியலை, கிரிக்கெட் சூதாட்டம் போன்று மாற்ற முடிகிறது. அதிலும், தமிழக அரசியல், இன்று உலக அரங்கில் மிகுந்த கேலிக்கு ஆளாகியுள்ளது. பிகாரில்கூட, சிறப்பான முறையில் தேர்தலை நடத்திவிட்டோம்.

ஆனால், ஏப்ரலில் நடைபெறவிருக்கும் தமிழகத் தேர்தலை நினைத்தால்தான் கதி கலங்குகிறது, இதுதான் தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய கவலையாக இருக்கும் என்றால் மிகையில்லை. ஏற்கெனவே திருமங்கலம் ஃபார்முலா, பென்னாகரம் ஃபார்முலா என்று புதிய இலக்கணங்கள் வகுத்துள்ள தமிழக அரசியல்வாதிகள், இன்னும் என்னவெல்லாம் அஸ்திரங்களை ஏவி, தேர்தல் ஆணையத்தை திக்குமுக்காடச் செய்து, ஓட்டுகளை களவாடி, ஓட்டுகளைப் பொறுக்கி, ஓட்டுகளைப் பிரித்து, அதிகார நாற்காலியைப் பிடித்துக் கொள்வார்களோ என்ற கிலி ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல், மே மாத வெக்கையை அதிகரிக்கும் விதத்தில் ஏசியும் பேசியும், கோடிக்கணக்கான கள்ளப்பணத்தைத் திருட்டுத்தனமாக விநியோகித்தும், ஆயிரக்கணக்கான கிடாய்களைப் பலி கொடுத்து, பிரியாணி விருந்து கொடுத்தும், சாராயத்தை ஆறாக ஓடவிட்டும், பத்தடிக்கு ஒன்று வீதம் ஆபத்தான பிவிசி ஃபிளக்ஸ் விளம்பரப்பதாகைகளால் கண்களைத் துன்புறுத்தி, டையாக்சின் நச்சுக்காற்றைப் பரப்பியும், தேர்தலைப் போர்க்களமாக மாற்றி விடுவார்கள் என்று அஞ்சத் தோன்றுகிறது. பின்தங்கிய மாநிலம் எனப்படும் பிகாரில் தேர்தல் ஆரோக்கியமாக நடந்ததெப்படி?

ஏனென்றால், அங்கு நிதீஷ்குமார் எனும் தொலைநோக்குப்பார்வையுள்ள தலைவர் தோன்றி, மக்களைக் கண்ணியமான ஜனநாயகத்துக்குத் தயார் செய்தார். மக்களுக்கு ஆசானாக, முன்னுதாரணமாக இருக்கிறார். கவர்ச்சி ஜிகினா ஃபார்முலாக்கள் மூலம் மக்களை ஏமாற்ற முயலவில்லை. ஆடம்பர அரசியல், அடாவடி அரசியல், ஜாதி அரசியல், வாக்கு வங்கி அரசியல் ஆகியவற்றைக் கடந்து செல்ல முயன்றார். நாளையும் அவர் வெற்றி பெறுவார் என்று கூற முடியாது, தோற்றுவிடலாம். ஆனாலும், அவரது அணுகுமுறை மிகுந்த பாராட்டுக்கு உரியது, மற்ற அரசியல்வாதிகள் பின்பற்ற வேண்டியது. ஆனால், தமிழகத்தில் இருப்பவர்களோ, தலைவர்கள் அல்ல, தரகர்கள். ஜனநாயகத்தின் ஒவ்வொரு கூறுகளுக்கும் ஒரு விலை வைத்து, அதைப் பணநாயகமாக மாற்றி விட்டவர்கள். தாங்களும் சாக்கடையில் குளித்து, மக்களையும் புதைகுழியில் தள்ளத்தயாராகி விட்டவர்கள்.

தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதாக மாய்மாலம் காட்டுபவர்கள். தமிழ்ச் சமூகத்தில் இன்று ஏற்பட்டிருப்பவை வளர்ச்சித்தசைகள் அல்ல, புற்றுநோய்க் கட்டிகள். இதன் விளைவாக தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், மன நலம், பொது அமைதி, தனிநபர் ஒழுக்கம், மண்ணின் விழுமியக் கூறுகள் என்று எல்லாமுமே நசிந்து வருகின்றன. ""பெரும் பணக்காரர்களோ, ஆயுத பலம் கொண்டவர்களோ, நியாயமாக ஒரு சமுதாயத்தை வழி நடத்த முடியாது. ஒரு சமுதாயத்தின் மிகச்சிறந்த மனங்களை அந்தச் சமுதாயத்தை வழிநடத்த வேண்டும்'' என்கிறார் ப்ளேட்டோ.

ஆனால், இன்றைக்குத் தமிழகத்தில் நடப்பதென்ன? கூலிப்படைத்தலைவர்களும், பெரு நிறுவன முதலாளிகளும் நேரடித் தேர்தல் அரசியலில் இறங்கி விட்டார்கள். மீன் இறந்தவுடன் தலையில் இருந்து அழுகத் தொடங்கும். பின்னர், அதன் உடலும் அழுகும். அதுபோன்று தமிழக அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் அழுகிவிட்டதனால், அது தமிழ்ச் சமுதாயத்தின் பின்னடைவுக்கும் காரணமாகி வருகிறது. ஆதலால், பணபலம், ஆள்பலம், இன்னபிற அவலங்கள் கட்டுப்படுத்தப்பட்டு, வருகிற தேர்தல் ஓரளவு கண்ணியமாக நடைபெற்றால்தான் தமிழகத்தின் எதிர்காலம் சீரமைக்கப்படுவதற்கும், அதன் தாக்கம் தேசிய அளவில் பிரதிபலிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.

தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கு வேண்டிய உண்மையான முயற்சிகளை எடுக்கத் தேர்தல் ஆணையம் முனைப்புக் காட்டுகிறது. தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளுக்கு உரம் சேர்க்கும் வகையில், சமூக ஆர்வலர்கள், பெண்களுக்கான அமைப்புகள், சிறு சிறு தன்னார்வ இயக்கங்கள், ஓய்வுபெற்ற நேர்மையான சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆகிய பலர் இணைந்து கண்ணியமான தேர்தலுக்கான கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தி, அரங்கக் கூட்டங்கள் நடத்தத் தொடங்கியுள்ளனர்.

தங்களது செயல்பாடுகளை விரிவுபடுத்தி, நடுநிலையாளர்கள், இளைஞர்கள் ஆகியோரை ஒன்றிணைத்துச் செயல்பட்டால், தேர்தலின் கண்ணியத்துக்கு இவ்வமைப்பால் உதவ இயலும். நுகர்வுக்குள் சிக்கிக்கொண்டு ஓட்டுப்போட மறுக்கும் மேல்தட்டு மக்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப வேண்டியுள்ளது.

ஊழல், விலைவாசி, ஏமாற்றுத் திட்டங்கள், வன்முறை ஆகியவற்றால் விரக்தி அடைந்து தேர்தலைப் புறக்கணிக்க நினைப்பவர்களிடம் வாக்குகள் மூலம் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று நம்பிக்கை அளிக்க வேண்டியுள்ளது. வாக்குகள் விற்பனைக்கல்ல, தன்மானம் இழப்பதற்கல்ல, ஊழல், மக்களின் உயிரைக் குடிக்க வல்லது. லஞ்சம், அடுத்த தலைமுறையை அழித்து வருகிறது போன்ற கோஷங்களை உரக்கப் பேச வேண்டியுள்ளது. மிக முக்கியமாக, பரபரப்பான செய்திகளையும் மசாலாத்தனமான கதைகளையும் தாண்டி, மக்களிடமும், பொதுவில் இருப்பவர்களிடமும், தேர்தலைக் கண்ணியமாக நடத்துவதற்கான பரப்புரை செய்வது மட்டுமல்லாமல், மக்களின் மனசாட்சியாக நடந்து கொள்ளும் கடமையும் இன்று ஊடகங்களுக்கு உள்ளது. நியாயத்தின் பக்கம் இருக்கும் ஊடகங்களும், சிறு பத்திரிகைகளும், சமூக அக்கறை உள்ள நிருபர்களும் தங்கள் பங்கைத் திறம்பட ஆற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை இருக்கிறது.

தமிழகத்தின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் ஆகியோர் மக்களுக்கு அதிகபட்ச நன்மை செய்வதற்கே தங்களது பதவி என்று உணர்ந்து, நேர்மையாகச் செயல்பட வேண்டிய கடமை காத்துக்கொண்டிருக்கிறது. ஆக மொத்தம், அடுத்த 42 நாள்களுக்கு தமிழ்ச் சமுதாயத்தின் மீது உண்மையான பற்றுக் கொண்டவர்கள் எல்லோரும், பணநாயகத்துக்கு எதிராகவும், தசைபலத்துக்கு எதிராகவும் அணி திரள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. திருமங்கலம் ஃபார்முலாவையும், பென்னாகரம் ஃபார்முலாவையும் தமிழகம் முழுவதற்குமான ஃபார்முலாவாக மாற்றும் முயற்சி நடந்தால், அதனை முறியடிக்க வேண்டியுள்ளது.

இல்லையென்றால் தமிழகம், அழிவு ஃபார்முலா எனும் ஒரு வழிப்பாதைக்குள் சிக்கிக் கொள்ளும் அபாயம் காத்திருக்கிறது. கண்ணியமான தேர்தலுக்கான அவசியம் பற்றி ஓயாமல் பேசுவதும், எழுதுவதும் செயல்படுவதும் நமது கடமை, பணி, சமூக சேவை என்று தவறாக நினைக்க வேண்டாம். அதுதான் நமது எதிர்காலத் தலையெழுத்தையே இனிமேல் தீர்மானிக்க இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். இன்றைய இந்திய ஜனநாயகம் ஊழல்வாதிகளிடமும், கிரிமினல் மாஃபியாக்களிடமும், பேராசை பிடித்த வாரிசுகளிடம் சிக்கிக்கொண்டு, ஆன்மாவற்ற, ஆண்மையற்ற மக்களாட்சியாக மாறிவிட்டது.

இந்த ஜனநாயகத்தை மீட்டு அர்த்தமுள்ளதாக்கும்வரை தூக்கத்தையே தொலைத்துவிட்டு தளராமல் வீரியத்துடன் செயல்பட வேண்டிய கடமை நம்மில் பலருக்கு உள்ளது. தமிழ்ச் சமூகத்தின் பால் அக்கறை கொண்டவர்கள், விஷயம் தெரிந்தவர்கள் எல்லோரும் கண்ணியமான தமிழகத் தேர்தலை வலியுறுத்தி களப்பணியாற்றுவோம்!

நன்றி :தினமணி

Sunday, February 13, 2011

தனிமனித ஒழுக்கம்




மக்கள் தொகையில் உலகின்இரண்டாவது இடத்தில் இருக்கும்மிகப்பெரிய ஜன நாயக நாடானஇந்தியாவில் இன்று பெரும் சாபக்கேடாக இருப்பது ஊழல் .முந்த்ரா ஊழலில் இருந்து இன்றைய இரண்டாம்தலைமுறை அலைகற்றை ஒதுக்கீட்டுஊழல் வரை நடந்த ஊழல்களில்இதுவரை ஊழல்வாதிகள் தண்டனைபெற்றதாக சரித்திரம் இல்லை.அரசியல் என்றாலே சம்பாதிப்பதற்கான தளம் என்ற தவறான எண்ணம் இன்றைய தலைமுறையிடம் விதைக்கப்பட்டு இருக்கிறது.தொன்மையான பாரத கலாச்சாரத்தின் அரசியல் களத்தின் 1947 சுதந்திரத்திற்கு பிறகு ஏற்பட்ட அரசியல் அமைப்பில் ஏற்பட்ட கோளாரே இதற்க்கு காரணம் என்றால் மிகை அல்ல . இந்த மனநிலை மாற்றம் சமூகத்தில் எப்போது ஏற்பட்டு இருக்க வேண்டும் என்று நாம் சிந்தித்து பார்க்க வேண்டும் .1967 தமிழ் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அதிகாரத்திற்கு வந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின் முதல் அமைச்சரான கலைஞர் .கருணாநிதி மீது சுமத்தப்பட்ட ஊழல் ஒட்டு மொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது .அன்றைய பாரத பிரதமர் இந்திரா காந்தியால் அமைக்கபட்ட நீதிபதி சர்க்காரியதலைமையிலான கமிட்டி கருணாநிதி விஞ்ஞான முறையில் ஊழல்செய்துள்ளார் என்று அறிக்கையை சமர்பித்தது.ஆனால் நடவடிக்கை இல்லை.

அரசியலில் வாரிசுகளின் அடாவடித்தனம் ரவுடிகளின்அடங்காபிடாரிதனம்,கிரிமினல்களி
ன் பங்களிப்பு ஆகியவை மீண்டும் நமது அரசியல் அமைப்பை சகதியில்தள்ளி விடுமோ என்ற அச்சம் சமூகவியலார் மத்தியில் எழுந்துள்ளது.நமதுசமூக அமைப்பு உலகிலே தொன்மையானது .நாம் நமது பாரதகலாச்சாரத்தினால் நிமிரிந்து நிற்கிறோம் .ஆனால் இன்று நமது சமுகத்தைதொன்மையை பாதுகாத்து பேணி காப்பாற்ற வேண்டிய அரசியல் அமைப்புசெல்லரித்து விடுமோ என்ற ஐயம் சமீப காலமாக நடக்கும் நிகழ்வுகள்நமக்குள் எச்சரிக்கை மணி அடிக்கின்றன.

ஒரு நாடு நல்ல நாடாக திகழ நல்ல மக்களை பெற்று இருக்க வேண்டும்அந்த நல்ல மக்கள் ஒழுக்க சீலர்களாய் திகழ வேண்டும்.அந்த நல்ல மக்கள்தனிமனித ஒழுக்கத்தில் தலை சிறந்து விளங்க வேண்டும்.அந்தஒழுக்கத்தை நாம் எங்கிருந்து பெறுவது ?என்ற கேள்வி உங்கள் மனதில்எழுவது தெரிகிறது.எந்த பிள்ளையும் நல்ல பிள்ளைதான் இந்த பூமியில்பிறக்கையிலே என்ற கருத்துக்கு யாரும் மறுப்பளிக்க முடியாது.அந்தகுழந்தை நல்ல குழந்தையாக வளர்வதில் தாய்க்கு இருக்கும் பங்கு போல்சமுதாயத்திற்கும் பங்கு உள்ளது .பொய் சொல்ல கூடாது பாப்பா என்றுபாரதியார் பாடலை படித்து வளரும் சிறுவனோ அல்லது சிறுமியோ தான்படிக்கும் வாழ்க்கை பாடத்திற்கு நேர் மாறான சமுதாயத்தை தான் பார்க்கமுடிகிறது.

எனவே தனி மனித ஒழுக்கம் மூலமாக தான் நாம் நல்ல நேர்மையானசமுகத்தை அமைக்க முடியும் .அதற்க்கான முயற்சிகள் பள்ளி பருவத்தில்இருந்து ஆரம்பிக்க படவேண்டும் .ஆனால் அதை போதிக்கும் ஆசிரியர்கள்நேர்மையானவர்களாக இருக்கவேண்டும் .அவர்கள் தனிமனிதஒழுக்கத்தில் தலை சிறந்து விளங்க வேண்டும் .ஆசிரியர்கள் கற்பிக்கும்ஒழுக்கம் ஒழுக்கமற்றவர்களாக இருக்கும் பெற்றோரை மாற்றும் விதமாகஇருக்க வேண்டும் .உதாரணமாக தனது தந்தையுடன் கடைக்கு செல்லும்சிறுமி தனது தந்தை வாழை பழம் சாப்பிட்டு விட்டு தோலை பொது இடத்தில்வீசி எறிய முற்படுகையில் அதை தடுத்து 'அப்பா தோலை குப்பைதொட்டியில் தான் போட வேண்டும் 'என்று அறிவுரை கூறுபவர்களாக மாற்றவேண்டும் .அப்படி ஒரு சிறுமி சொல்வாளானால் அந்த தந்தை நாணி குறுகிவிடுவார்.அப்படிப்பட்ட சிறுவர் சிறுமியரை உருவாக்கும் மிகப்பெரியபொறுப்பு ஆசிரியர் சமுதாயதிற்கு இருக்கிறது .

தனிமனித ஒழுக்கம் நமது பாரத தேசத்தின் மதிப்பை உயர்த்தும் .தேசபற்றுவளரும் .புராதன இந்தியாவின் கலாச்சாரம் தேடி வருவோர் எண்ணிக்கைகூடும் .தேசத்தில் நேர்மையான அரசியல் ,ஊழலற்ற அரசாங்கம்வன்முறை,சாதிகளற்ற,குற்றங்கள் அற்ற சமூகம் அமையும் .நினைத்துபார்க்கும் போதே நெஞ்சம் குளிர்கிறது .....

ஆனால் அதை நிறைவேற்ற போவது யார் ?ஆசியர் சமுதாயமா ?பெற்றோர்சமுதாயமா?அல்லது அரசாங்கமா? என்பதே நமக்குள் எழுகின்ற மில்லியன்டாலர் கேள்வி ....
. ,

Wednesday, December 22, 2010

நாவடக்கம்


“பேரரசன் ஒருவனிடம், வலிமை மிக்க யானை ஒன்று இருந்தது. போர்க்களம் செல்லும் போதெல்லாம் அதன் உடல் முழுவதும், வாட்கள் நிறைந்த கவசங்களால் மூடப்பட்டிருக்கும். அதன் வாலிலும் இரும்புக் குண்டு ஒன்று இணைக்கப் பட்டிருக்கும். அந்த யானையின் துதிக்கையில் அம்பு படாமல் இருக்க, துதிக்கையை நன்றாகச் சுற்றி வைத்துக் கொள்வதற்குப் பழக்கியிருந்தான் பாகன்.

ஒரு நாள், போர்க்களத்தில் அரச யானை புகுந்து எதிரிப் படைக்குப் பேரழிவைத் தந்தது. அதன் அங்கங்களில் பொருத்தப்பட்டிருந்த ஆயுதங்களில் ஒன்று கீழே விழுந்ததும், அதை எடுக்க… அதுவரை வளைத்து வைத்திருந்த துதிக்கையை நீட்டியது யானை. இதைக் கண்ட பாகன், துதிக்கையின் மீது எதிரிகள் ஈட்டியை எறிவதற்குள் விரைவாகக் களத்தில் இருந்து அந்தக் களிறை வெளியேற்றினான். அரண்மனையில் அரசனைச் சந்தித்த பாகன், ‘அரசே, நம் யானை இன்று போர்க்களத்தில் தனது துதிக்கையை நீட்டிவிட்டது. இனி அது போருக்குப் பயன்படாது’ என்றான்.

ராகுலா! மனிதர்கள் தங்கள் நாவை அடக்கும் வரை நன்மை அடைவர். துதிக்கையைச் சுருட்டி வைக்கும் வரைதான் யானைக்குப் பாதுகாப்பு. நாவைக் கட்டுப்படுத்திப் பொய் பேசுவதைத் தவிர்த்தால்தான் தீமையில் இருந்து மனிதருக்குப் பாதுகாப்பு என்றார் புத்தர்.

மனதில் மாசு இருந்தால்தான் நாக்கு பொய் பேசும். மனதை அடக்காமல் நாக்கை அடக்குவதால் நன்மை இல்லை.

நன்றி :கொல்லிமலை ஆனந்தன்

Tuesday, December 21, 2010

கனவில் தொடங்கிய பயணம்


கனவில் தொடங்கிய பயணம்

அகிலத்தை அதிர வைத்த பல திட்டங்களைப் போலவே, அரவிந்த் கண் மருத்துவமனையும் ஒரு கனவில் தொடங்கிய பயணம். ‘இந்தியாவில் பலரும் தேவையே இல்லாமல் பார்வையை இழந்திருக்கிறார்கள்; அதைச் சரிசெய்ய வேண்டும்! என்று கனவு கண்டவர், ஒரு முன்னாள் பேராசிரியர். மெலிந்த உருவம் கொண்டவர். மதுரை மருத்துவக் கல்லூரியில் கண் நோய் பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்’. (நாம் எல்லோரும் அறிந்ததே. ஓய்வு பெற்ற பிறகு ஒருவரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று…)

ஒரு ஒடிசலான முதியவரின் கனவுக்கு உலகத்தையே அசைக்கும் சக்தி இருந்திருக்கிறது என்றால்? நாம் இன்னும் கனவு காணாமல் இருப்பதற்கு என்ன காரணம்? நமக்கு வயதாகிவிட்டது என்பதா? ஓய்வு பெற்றுவிட்டோம் என்பதா? இப்போதுதான் பணியில் சேர்ந்திருக்கிறோம் என்பதா? நமக்கு அதிகாரமே இல்லையா? நாம் இருப்பதிலேயே கடைநிலை ஊழியரா? உடல்நிலை ஒத்துழைக்காது என்பதா? மனநிலையா?

இதெல்லாம் வழக்கமாக மற்றவர்களையும் நம்மையும் ஏமாற்றிக் கொள்ள நாம் சொல்லும் காரணங்கள். நம் திறமைகளையும், திறன்களையும் முழு அளவில் பயன்படுத்தாமல் இருக்கச் சொல்லப்படும் சாக்குகள். ஆனால் இந்த மனிதரைப் பாருங்கள். ஐம்பத்தாறு வயதில் அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்றபிறகு ஆரம்பித்து, உலகப் புகழ்பெற்ற அரவிந்த் கண் மருத்துவ மனையை ஏற்படுத்தியிருக்கிறார்.

நம்மில் பலபேர் இந்த வயதில் “ஓய்வு பெற்று விட்டேன்” என்று சொல்லிக்கொண்டு சாய்வு நாற்காலியில் சரிந்திருப்போம். அரவிந்தின் வாழ்க்கை முறை என்ன? “நாம் என்ன செய்கிறோமோ, அதைத்தான் நமது பணியாளர்களும் பின்பற்றுவார்கள்”. நாளாவட்டத்தில் அது அவர்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிடும். ‘இதைச் செய், அதைச் செய் என்று உத்தரவு மட்டுமே போட்டுக்கொண்டிருந்தால் அந்த நேரத்துக்கு அதைச் செய்வார்கள். ஆனால் சீக்கரமே எல்லாம் மறந்துவிடும். எப்போதுமே நாமே உதாரணமாக இருந்து வழிகாட்டுவதுதான் நிலைக்கும்’.

அரவிந்தின் மூத்த மருத்துவர்கள், எதையும் தாங்களே முன் நின்று செய்வார்கள். தாமே உதாரணமாக இருந்து வழி நடத்துவது என்பதுதான் அரவிந்தின் நாடித்துடிப்பு. ‘நேரத்துக்கு வேலைக்கு வர வேண்டும் என்பதைத் தனியாக ஒவ்வொருவரிடமும் போய்ச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. நாம் தினம் தினம் நேரம் தவறாமல் வருவதை அவர்கள் கண்கூடாகப் பார்க்கிறார்கள்; அதையே பின்பற்றத் தொடங்குகிறார்கள். மருத்துவமனையில் எங்காவது தூது தும்பு தென்பட்டால் நாங்களே அதைத் துடைப்போம். ஏதாவது கீழே விழுந்தால் நாங்களே குனிந்து பொறுக்கிப் போடுவோம். இதைக் கவனிக்கும் ஊழியர்களும் அச்சாக அதையே செய்கிறார்கள். நம்மை நாமே தொடர்ந்து சுயபரிசோதனை செய்து கொள்வதும், அடுத்த இலக்கை நோக்கி முன்னேறுவதும் அரவிந்தின் வாழ்க்கை முறைகள்’!

பலசுவாரஸ்யமான முரண்பாடுகள்! இவர்கள் மிகவும் மென்மையான மனிதர்கள்; ஆனால் வேலை என்று வந்துவிட்டால் அடிமை போலப் பிழிந்தெடுத்துவிடுவார்கள். அதே சமயம், தானே முதல் ஆளாகக் களத்தில் நின்று உழைப்பார்கள். தங்கள் ஊழியர்களின் மேல் நிறைய அக்கறை எடுத்துக்கொள்வார்கள். ஆனால் அவர்களைத் தத்தம் திறமையின் எல்லைவரைப் போய் நிற்க விரட்டுவார்கள். அந்த எல்லையைத் தொட்ட பிறகு ‘இன்னம் கொஞ்சம் ஓடு!’ என்பார்கள். மனிதர்களைப் பின்னாலிருந்து செலுத்திச் செலுத்தி, சாதிக்க முடியாத சாதனைகளைச் சாதிக்க வைப்பார்கள்.

அரவிந்தின் ‘பேராசை’ அதிகரித்துக் கொண்டே போகிறது. ‘இது வரை எவ்வளவு செய்து முடித்திருக்கிறோம்’ என்பது முக்கியமல்ல; இன்னும் எவ்வளவு மீதியிருக்கிறது? என்பதுதான் அவர்கள் அளவுகோல். இந்தியாவில் பார்வையின்மையை ஒழிப்பது என்பதில் ஆரம்பித்து, இப்போது உலக அளவிலேயே அதைச் செய்வது என்ற இலக்கை எடுத்துக் கொண்டுவிட்டார்கள்.

அரவிந்தின் கதையிலிருந்து ஒரு முக்கிய பாடம் கிடைக்கிறது என்றால், அது ‘அகிலத்தை நம்மாலும் அசைக்க முடியும்’ என்பதுதான். எல்லாமே ஒரு கனவிலிருந்துதான் ஆரம்பமாகிறது. ‘யாராக இருந்தால் எனக்கென்ன? என்று அலட்சியம், எது நடந்தால் எனக்கென்ன என்ற மனநிலையும், அந்தக் கனவின் கை கால்கள்’.

அரவிந்த் கண் மருத்துவமனை சாதனை பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்:

  • 24 இலட்சம் கண் புறநோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள்.
  • 2,86,000 காடராகட் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன ஒரு வருடத்திற்கு.
  • உலகத்திலேயே பெரிய கண் சிகிச்சை கல்வியகம் ஹார்வாட், ஜான்ஸ் ஹாப்கின்ஸ், யேல் போன்ற புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கழைலக்கழகங்களின் மாணவர்கள் பயிற்சிக்காக வருமிடம்.
  • அறுவை சகிச்சை செய்து கண்ணுக்குள்ளேயே பொருத்தப்படும் இன்ட்ரா ஆக்குலர் லென்சுகள் (IoL) சந்தைக்கு வந்தபொழுது இதன் விலை 5000 ரூபாய். இந்த லென்சுகளை தாமே உற்பத்தி செய்து 200 ரூபாய்க்கு விற்று, உலகின் IOL லென்சுகள் வரலாற்றில் புதிய சகாப்தம் படைத்த நிறுவனம்.
  • தொண்டு நிறுவனங்களுக்காக மட்டும் 60 இலட்சம் லென்சுகளை தயாரித்திருக்கிறார்கள்.
  • இந்தியா மட்டுமின்றி உலகின் 85 நாடுகளுக்கு IOL லென்சுகளை ஏற்றுமதி செய்கின்ற நிறுவனம்.
  • இங்குள்ள ஒவ்வொரு மருத்துவரும் வருடத்துக்க 2000 அறுவை சிகிச்சைகள் செய்கிறார்கள்.
  • ஒவ்வொரு மருத்துவரும் ஒரு நாளைக்கு சராசரியாக 25 முதல் 30 அறுவை சிகிச்சை செய்கிறார்கள். அதுவும் காலை ஏழுமணி முதல் முற்பகல் வரை மட்டுமே. பிற்பகலில் அறுவை சிகிச்சைகள் கிடையாது. அறுவை சிகிச்சை அறையை சுத்தப்படுத்தி அடுத்த நாளைக்குத் தயாராக்குவதற்காக இந்த இடைவெளி.

குறைந்த லாபம். நிறைவான சேவை!!!

Saturday, December 11, 2010

ஒரு பிறவி பலமுறை வாழ்தல்


கண்ணதாசனின் பாடல் வரிகளில் சில….

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்

உலகம் உன்னிடம் மயங்கும் – நிலை

உயரும் போது பணிவு கொண்டால்

உயிர்கள் உன்னை வணங்கும்!

ஆசை கோபம் களவு கொள்பவன்

பேசத் தெரிந்த மிருகம்

அன்பு, நன்றி, கருணை கொண்டவன்

மனிதவடிவில் தெய்வம்!!

மானிடப் பிறவி: அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனின் கூண், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அரிது. இப்படியொரு மானிடப் பிறவியைய் பெறுவதற்கு என்ன தவம் செய்திடல் வேண்டும். இந்த அரியதொரு மானிட பிறவியில் பிறந்து பிறவிப் பயனை அடைவதற்குள், தினம் தினம் நமது வாழ்க்கையில் எத்தனை போராட்டங்கள், வேதனைகள், சோதனைகள். இறுதியல் சாதனைகள்! ஒரு பிறவியைய் எடுத்து அதில் ஒரு வாழ்க்கையைய் வாழ்வதில் நாம் இவ்வளவு சோதனைகளை சாதனைகாளக மாற்றுகிறோம். இப்படிப்பட்டதொரு வாழ்க்ககையைய் வாழ்கின்ற நம் மத்தியல் ஒரு பிறவியல் பலமுறை வாழ்ந்தவர்களைப் பற்றிப் பார்ப்போம். இவர்கள் அனைவரும் ‘மனித வடிவில் தெய்வமானவர்கள்’ என்றே கூறலாம்!!

  • சர் கிறிஸ்டோஃபர் ரென் 17ம் நூற்றாண்டிலவ் வாழ்ந்தவர். இவர் இந்த 17ம் நூற்றாண்டில் இரண்டு முறை வாழ்ந்திருக்கின்றார்.

முதல் வாழ்க்கைகுழந்தைப் பருவ வளர்ச்சி, நல்ல கல்வி, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் வான் இயல் பேராசிரியர் வேலை. முதல் வாழ்க்கை நாற்பத்தெட்டு ஆண்டுகள் நீடித்தது. பிறகு புதிய மாறுபட்ட வாழ்க்கை வாழ்வது என தீர்மானித்தார். வானிவியல் நிபுணராக இருந்து தூரத்திலிருந்து ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதை விட, வான் உலகத்தையே பூமிக்குக் கொண்டுவந்து அழகான தேவாலயங்களை நிர்மாணிப்பது என முடிவெடுத்தார்.

இரண்டாவது வாழ்க்கைஅடுத்த நாற்பத்தெட்டு ஆண்டுகளில், ஐம்பத்து மூன்று தேவாலயங்களை நிர்மாணிப்பதில் செலவிட்டார். அந்த தேவாலயங்கள் அவருடைய பெருமையின் நினைவுச் சின்னங்களாக கண்ணதாசன் பாடிய பாடல் வரிகள் போல் “நான் நிரந்தமானவன் அழிவதில்லை! எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!!” இன்றும் நிலைத்து நிற்கின்றன. அவற்றில் ஒன்று தான் லண்டனில் உள்ள செயின்ட் பால் கதீட்ரல். அந்த மிகப்பெரிய தேவாலயம் இன்றைக்கும் அவருடைய புகழை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

  • டாக்டர் ஆல்பார்ட் ஸ்வைட்ஸர் – தத்துவ சாஸ்திரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்கிற நிலையில் பல அறிவு விளக்க நூல்களை எழுதியிருக்கிறார். இது இவரது முதல் நிறைவான வாழ்க்கையின் அடையாளம்!!!

பிறகு மதத்துறையில் ஒரு புதிய வாழ்க்கையினை தேடினார். மத சம்பந்தப்பட்ட தத்துவங்களை பயின்று டாக்டர் பட்டம் பெற்றார். மத போதகராகி இரண்டாவது புதிய வாழ்க்கையினை தொடங்கினார். பிறகு, சங்கீதத்தை போதித்தார். அதைப் பயின்றார். சங்கீதத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். உலகப் புகழ் பெற்ற ‘சங்கீத மேதை’ என்கிற சிறப்புக்கும் உரியவரானார். சங்கீதத் துறையிலும் சிறப்பினைப் பெற்ற இவர் தனது மூன்றாவது வாழ்க்கையுடன் நிறுத்தவில்லை.

ஆப்பிரிக்க காடுகளில் வாழும் நாகரிகமற்ற மக்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் மருத்துவ உதவி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். மருத்துவத்துறை பற்றியும் அறுவை சிகிச்சை பற்றியும் பயிலலானார். நான்காவது முறையாக, மருத்துவத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார். சங்கீத மேதை என்கிற புகழை உதறி எறிந்து விட்டு நான்காவது வாழ்க்கையினைத் தொடங்கினார். ஆப்பிரிக்காவில் உள்ள லம்போர்னியாவில் உள்ள காடுகளில் நான்காவது வாழ்க்கை ஆரம்பமாயிற்று. மலைப்பாம்புகள், கொரிலாக்கள், முதலைகள், காட்டுமிராண்டிகள் வசிக்கின்ற ராட்சஸ காடுகளை அழித்து அங்கு வசிக்கின்ற மக்களுக்கு மருத்துவவசதி செய்ய மருத்துவமனை ஒன்றையும் கட்டினார். தனது நான்காவது வாழ்க்கையினை அந்த காட்டிலேயே அமைத்துக் கொண்டு தெய்வீக மயமானார்.

“நிகழ்காலத்திலேயே சிக்கித் தடுமாறுகிறீர்கள் என்று பலரும் சொல்வதை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். அது ஒரு அறிவுப் பூர்வமான வாசகம்”. பலரும் ஒரே ஒரு வாழ்க்கைதான் வாழ்கிறார்கள். அதையும் வெற்றியாக்கிக் கொள்வதில் எத்தனையோ கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள்.

“வாழ்க்கை ஒரு சுகமான அனுபவமே!

வாழக் கற்றுக் கொள்வோம்.

நமது இப்போதைய வாழ்க்கையிலேயே சிக்கித் தடுமாறாமல் இருப்பதற்கான

வாழ்க்கையைய் வாழக் கற்றுக் கொள்வோம்.”!!

Tuesday, November 23, 2010

ஜே .பி .சி ( நாடாளுமன்ற கூட்டு குழு) என்றால் என்ன ?



ஒரு நாட்டின் முதுகெலும்பானபாராளுமன்றம் முடங்கிகிடக்கிறது.முக்கியமான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல்பெறவேண்டிய மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.ஆனால்ஜனநாயகமே கேலிகூத்தாக்கும்வகையில் அரசியல் கட்சிகளின்செயல்பாடுகள் உள்ளன. காங்கிரஸ்அரசின் ஊழல் கறையாக தகவல் அலை கீற்று ஒதுக்கீட்டு ழல்,காமன்வெல்த்விளையாட்டு ஊழல் ,கார்கில் வீடு ஒதுக்கீடு ஊழல் ஆகியவை சந்து சிரிக்கவைத்து கொண்டு இருக்கின்றன.அவர்களுக்கு தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டும் வகையில் தற்போது கிளம்பியிக்கும் பா. . முதல்வர் எடியூரப்பாவின் 5000 கோடி ரூபாய் நில ஒதுக்கீட்டு ஊழல் போன்றவையால்சாதாரண மனிதன் மிகவும் ஆச்சரியமுடன் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்தவனாய் பார்க்கிறான் .அன்று முந்த்ரா ஊழலில் தனது துறை தவறு செய்துவிட்டது என்று அன்றைய நிதி அமைச்சர் டி .டி .கிருஷ்ணமாச்சாரி யாருடையவற்புறுத்தலும் இல்லாமல் உடனடியாக தனது பதவியை ராஜினாமாசெய்தார்.அதுபோல் 1956 அரியலூரில் நடந்த ரயில் விபத்திற்கு பொறுப்பேற்றுஅன்றைய ரயில்வே மந்திரி லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமாசெய்தார்.அப்போது இருந்த அரசியல்வாதிகள் தன்னலம் கருதாதவர்கள் பிறர்நலம் பேணிய மகான்கள் .

சரி ..இதற்கெல்லாம் விடிவுகாலம் தான் எப்போது ?காலம் தான் பதில் சொல்லவேண்டும். எதிர்கட்சிகள் தகவல் இரண்டாம் தலைமுறை அலை கீற்றுஒதுக்கீட்டு ஊழலை வெளிக்கொணர நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்குஉத்தரவிட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்து அன்றாடநாடாளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வருகிறார்கள் .இந்நிலையில்நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை என்றால் என்ன ?இதற்க்கு முன்னால்அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைகள் என்ன ?என்பது பற்றிபார்ப்போம்.

.
ஜே.பி.சி., என்றால் என்ன?அரசாங்கத்தின் அலுவல்கள் மற்றும் விவகாரங்கள்அனைத்திற்கும், பார்லிமென்ட் நடைபெறும் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வுகாண்பது என்பது இயலாத காரியம். எனவே அரசாங்கத்தின் வேலைப்பளுவைகுறைத்து, அனைத்து விவகாரங்களையும் பரிசீலனை செய்து, தீர்வு காணும்வகையில், மத்திய அரசு பல்வேறு கமிட்டிகளை அமைக்கிறது.இந்த கமிட்டிகள்இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று பார்லிமென்ட் நிலைக் குழுக்கள்என்றும் மற்றொன்று தற்காலிக கூட்டுக் குழுக்கள் (எச்..சி.,) என்றும்அழைக்கப்படுகிறது. பார்லிமெண்ட் நிலைக் குழுக்கள் ஆண்டுதோறும்அமைக்கப்படும். ஆனால், எச்..சி., எனப்படும் தற்காலிக பார்லிமென்ட் கூட்டுக்குழுக்கள் (ஜே.பி.சி.,) தேவை ஏற்பட்டால் மட்டுமே அமைக்கப்படும்.

ஜே.பி.சி., அமைக்கப்படும் முறை : ஜே.பி.சி., அமைப்பதற்கு பார்லிமென்டின்இரு அவைகளின் ஒப்புதலும் வேண்டும். ஒரு அவையில் ஜே.பி.சி., அமைக்கமசோதா நிறைவேற்றப்பட்டாலும், மற்றொரு அவையின் ஒப்புதலும் பெறவேண்டும். இல்லையென்றால், இரு அவைகளின் தலைவர்களும் கலந்து பேசிமுடிவு எட்டப்படும். பார்லிமென்டில் கட்சிகளின் எம்.பி.,க்களின் பலத்தைஅடிப்படையாக கொண்டு உறுப்பினர்கள் நியமனம் செய்யும் நடைமுறைகடைபிடிக்கப்படுகிறது. தவிர, மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள்லோக்சபாவிலும், ஒரு பங்கு உறுப்பினர்கள் ராஜ்யசபாவில் இருந்தும் 2:1 என்றவிகிதத்தில் நியமிக்கப்படுவர்.

ஜே.பி.சி.,யின் விசாரணை நடைமுறை : ஜே.பி.சி., அமைக்கப்பட்டவுடன்அதற்கென சில விதிகள் மற்றும் நடைமுறைகள் வகுக்கப்படும். அதன்படிஜே.பி.சி., செயல்படும். மேலும், விசாரணைக்கு தேவையான ஆலோசனைகளைநிபுணர்களிடமிருந்து பெற்று கொள்ளலாம். இதற்காக சிறப்பு ஆலோசகர்களும்நியமிக்கப்படுவர்.ஜே.பி.சி.,யி ன் விசாரணை மிகவும் ரகசியமாக நடைபெறும். ஆனால், விசாரணையின் தன்மைகள் குறித்து ஜே.பி.சி., தலைவர் அவ்வப்போதுபத்திரிகையாளர்களுக்கு செய்திகளை வெளியிடுவார்.

போபர்ஸ் ஊழல்: கடந்த 1987ம் ஆண்டு, நாட்டின் மிகப்பெரிய ஊழலாககூறப்பட்ட போபர்ஸ் பீரங்கி ஊழல் குறித்து, ஜே.பி.சி., விசாரணை நடத்தஎதிர்க்கட்சிகள் போர் கொடி தூக்கின. இதனால், பார்லிமென்ட் அலுவல்கள் பலநாட்கள் ஸ்தம்பித்தன.மேலும், அப்போதைய மத்திய நிதி அமைச்சர் வி.பி.சிங், ஜே.பி.சி., அமைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக களமிறங்கினார். இதனால், விழிபிதுங்கிய மத்திய அரசு வேறு வழியின்றி, ஜே.பி.சி., அமைக்கஒப்புக் கொண்டது. நாட்டில் முதன்முதலில் அமைக்கப்பட்ட இந்த ஜே.பி.சி., பெரும் சர்ச்சையில் சிக்கியது. மத்திய அரசு அமைத்த ஜே.பி.சி.,யில், காங்கிரஸ்எம்.பி.,க்களே அதிகம் இடம் பெற்றிருந்தனர். எனவே, ஜே.பி.சி.,யைஎதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. மேலும், ஜே.பி.சி., விசாரணை நியாயமாகநடக்கவில்லை என்று கூறி, விசாரணை அறிக்கையை எதிர்க்கட்சிகள் ஏற்கமறுத்தன. இதனால், போபர்ஸ் ஊழல் குறித்து அமைக்கப்பட்ட ஜே.பி.சி., பயனற்று போனது.

பங்கு சந்தை ஊழல்: கடந்த 1992ம் ஆண்டு, ஹர்ஷத் மேத்தாவின் பங்கு சந்தைஊழல் குறித்து விசாரணை நடத்த இரண்டாவது முறையாக ஜே.பி.சி., அமைக்கப்பட்டது. வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தின் பங்குவர்த்தகத்தில் ஹர்ஷத் மேத்தா உள்ளிட்ட பங்கு சந்தை தரகர்கள் 1,000 கோடிரூபாய் அளவிற்கு மோசடி செய்தனர். இதன் எதிரொலியால் இந்திய பங்கு சந்தைவர்த்தகத்தில் கடும் சரிவு ஏற்பட்டது. நாட்டின் பங்கு வர்த்தக துறையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்திய இந்த மெகா ஊழல் குறித்து ஜே.பி.சி., விசாரணை நடத்திஅறிக்கை சமர்ப்பித்தது. ஆனால், அறிக்கையின் பரிந்துரையை ஏற்று, சிறப்புகோர்ட் அமைத்து விசாரணை துவங்க ஐந்து ஆண்டு காலம் பிடித்தது. மேலும், விசாரணை அறிக்கையின் பெரும்பாலான பரிந்துரைகள்அமல்படுத்தப்படவில்லை.இதுவே, பங்கு சந்தை வர்த்தகத்தில் அடுத்து ஒருமெகா மோசடி நடக்க காரணமாக அமைந்தது. மும்பையை சேர்ந்த பங்கு சந்தைதரகர் கேதன் பரேக்,கடந்த 1999 முதல் 2001 வரை பங்கு சந்தையில் பல நூறுகோடி மோசடி செய்தான்.இதனால், இந்திய பங்கு சந்தை வர்த்தகதில் பலத்த அடிவிழுந்தது. இந்த மெகா மோசடி குறித்து விசாரணை நடத்த மூன்றாவதுமுறையாக ஜே.பி.சி., அமைக்கப்பட்டது. பங்கு சந்தை தரகர் கேதனுக்கும், வங்கிமற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்துவிசாரணை நடத்தி மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.ஆனால், மூன்றாவது ஜே.பி.சி., அளித்த பரிந்துரைகளை அமல்படுத்தியதால், பங்குவர்த்தகத்தில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து பங்கு வர்த்தகதுறையில் ஜே.பி.சி.,யின் பரிந்துரைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. இதனால், மூன்றாவது ஜே.பி.சி., விசாரணையிலும் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை.


கோலா ஊழல்: இதற்கடுத்து, கடந்த 2003ம் ஆண்டு குளிர்பானங்களில் உடலுக்குதீங்கு விளைவிக்கும் நச்சுத்தன்மை வாயந்த ரசாயனங்கள் கலக்கப்படுவதாகஎழுந்த புகார் குறித்து, விசாரணை நடத்த ஜே.பி.சி., அமைக்கப்பட்டது. புகார் பற்றிவிரிவாக ஆய்வு நடத்திய ஜே.பி.சி., கமிட்டி, 2004ம் ஆண்டு தனது அறிக்கையைஅரசிடம் சமர்ப்பித்தது.இதில் குளிர்பானங்களில் நச்சுத்தன்மை கலந்தரசாயனங்கள் கலக்கப்படுவதை உறுதி செய்தது. மேலும், குளிர்பானநிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்துஅரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால் இந்த நடைமுறைகள் எந்த அளவுக்குபின்பற்றப்படுகின்றன என்பது வெளிப்படையாக தெரியவில்லை. இது புரியாதபுதிராகவே உள்ளது.எனவே, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகள் குறித்துஜே.பி.சி., விசாரணை நடத்தினாலும், அதில் எதிர்பார்க்கும் அளவுக்கு தீர்வுகள்எட்டப்படுமா? இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கைகள்எடுக்கப்படுமா? என்பது போன்ற கேள்விகளுக்கு மவுனமே பதிலாகிறது.

Saturday, November 6, 2010

இந்திய சுகாதாரத்தின் சவால்கள் -குப்பையும் பான்பராக் கறையும் .


சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில இருக்கும் இந்தியாவின் மக்கள் தொகை மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.அதற்கு ஏற்ப புது புது நோய்கள் பரவி வருகிறது .இதற்கெல்லாம் முடிவு என்பது தனிமனித சுகாதாரத்திலும் தனிமனித பொறுப்புணர்ச்சியிலும் தான் உள்ளது .இந்த வகையில் இந்திய சுகாதாரத்தை கெடுப்பது குப்பையும் ,பான்பராக் புகையிலை கறையும் என்றே நினைக்கிறன் .

சென்னை எந்த அரசாங்க கட்டிடத்திலும் சரி ஒரு சில தனியார் கட்டிடங்களிலும் சரி மாடி படிகளில் எங்கு பார்த்தாலும் பான்பராக் புகையிலை கறைகளை காணலாம்.அந்த இடங்களை கடக்கும் போது கைகுட்டையால் மூக்கை பிடித்து சென்ற அனுபவம் உங்களில் பலபேருக்கு கிடைத்து இருக்கும் .

இந்தியாவின் சுகாதாரத்துக்கு சவால் விடும் வகையில் அமைத்து இருக்கிறது
பான்மசாலா மற்றும் புகையிலை இத்யாதிகள் .சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில்
சுத்தத்திற்கு மிகவும் முன்னுரிமை வழங்கபடுகிறது .சிங்கப்பூரில் ஒரு பாக்கெட்
சிகரட்டின் விலை இந்திய ரூபாய்க்கு ஏழுநூறு ரூபாய் .ஆனால் இந்தியாவில் முப்பது ரூபாய்க்கு கிடைகிறது.சிங்கபூரில் நாம் கண்ட இடங்களில் துப்பினால் அபராதம் விதிக்கிறார்கள்.ஆனால் இந்தியாவில் சகட்டு மேனிக்கு பன்மசாலாவை மென்று கண்ட கண்ட இடங்களில் துப்புகிறார்கள்.மும்பை ரயில் நிலையங்களில் மற்றும் மும்பை புறநகர் ரயில்களில் இந்த பன்மசாலா ஆசாமிகள் ரயில்களுக்கு அபிசேகம் செய்வதை நிறைய பார்க்கலாம் .

ஏதாவது புதிய ரயில் பெட்டியை சேர்த்தால் இரண்டு நாட்களில் அதன் நிறம் சிவப்பு கலராகி விடுகிறது .இந்த பன்மசாலா மற்றும் புகையிலையால் வருகின்ற கேடுகளை பற்றி அரசாங்கம் பல வழிகளில் பிரசாரம் செய்து வருவது நமக்கு தெரியும் .அதுபோல் அதான் கேடுகள் குறித்து தெரிந்து இருந்தும் நாம் அதை கடைகளில் விற்பதற்கு அனுமதிப்பது
அரசாங்கமே தனது மக்களுக்கு மெதுவாக கொல்லும் விஷம் கொடுப்பதை போன்றது .பான்பராக் புகையிலை இத்யாதிகள் இந்திய சுகாதாரத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் சவால் விடுபவை.

இந்தியாவைப் பொறுத்தவரை குப்பைகள் மிகுந்த நாடு என வெளிநாட்டவர்களால் கேலி பேசப்படும் அளவுக்கு மாறிவிட்டது. சரி இவர்கள்தான் நம்மை இளக்காரமாகப் பேசுகிறார்களே என்றால் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் பேசும்போது, குப்பைகள் அதிகமாக இருப்பதற்காக இந்தியாவுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என கிண்டலாகப் பேசியுள்ளார். கிண்டலோ..சீரியúஸô இன்றைய நிலையில் குப்பைகள் குவிந்த நாடு இந்தியாதான் என்பதை மறுப்பதற்கில்லை.

இது போதாது என்று வெளிநாடுகளில் இருந்து கதிரியக்க கழிவுகள் மற்றும் E -Wastage எனப்படும் கம்ப்யூட்டர் கழிவுகள் இந்தியாவுக்கு குறைந்த கட்டணத்தில் விற்கபடுகின்றன.அதை இறக்குமதி செய்து மறுசுழற்சி செய்கின்றன சில நிறுவனங்கள்.மறுசுழற்சி செய்ய முடிந்த பொருள்களுடன் மறுசுழற்சி செய்ய முடியாத பொருள்களையும் அனுப்புகின்றன வளர்ந்த நாடுகள்.மொத்தத்தில் அவர்கள் குப்பையை கொட்டும் இடமாக இந்தியாவை மாற்றி விட்டார்கள்.இந்த விசயத்தில் அரசு மிகவும் கடுமையாக நடந்து கொள்ளவேண்டும்.மறுசுழற்சி செய்ய பெருள்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்க படவேண்டும்.
அமெரிக்கா போன்ற நாடுகள் நல்லது செய்வது போல செய்து அவர்கள் நாட்டை தூய்மைப்படுத்திக் கொள்கிறார்கள்.

நாட்டில் நாளுக்குநாள் குப்பைகளின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனாலும் மக்கள் மனது வைத்தால் மட்டுமே இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

குப்பைகளைச் சேகரித்து அதை இயற்கை உரமாக மாற்றுதல், மின்சாரம் தயாரித்தல் என பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.அதில் நமது சென்னை மாநகராட்சியின் பணி மிகவும் பாராட்டப்பட வேண்டியது.என்னதான் அரசாங்கம் செயல்பட்டாலும் குப்பையை அகற்றுவதிலும் சுகாதாரம் பேணுவதிலும் தனிமனித பங்கு இன்றியமையாதது.

சிங்கப்பூர், மலேசியா, கொரியா போன்ற பல நாடுகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்படுகிறது. குப்பைகளை எங்குமே பார்க்க முடியாது. ஆனால், நம் நாட்டிலோ குளம், குட்டை, ஆறு, நீர்த்தேக்கங்களில் கழிவுகள்தான் அதிகமாகக் காணப்படுகின்றன. நம் ஊரில் அவசரத்துக்கு டிரான்ஸ்பார்மர்களும் கூட ஒதுங்குமிடமாகிவிட்டது வேதனை தரும் விஷயம்.

பொதுவாக, சில கடைகளில் மட்டுமே காகிதத்தைப் பயன்படுத்துகின்றனர். இன்னும் பல கடைகளில் பாலிதீன் கவர்களின் உபயோகம் காணப்படுகிறது. இதை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும். புகை பிடிப்போருக்கு அபராதம், நடவடிக்கை என சில காலம் பரபரப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்புறம் பழைய மாதிரியாகி விட்டது. அதே நிலைதான் பாலிதீன் தடுப்பு நடவடிக்கையிலும் காணப்படுகிறது. எனவே மாற்றம் என்பது மக்கள் மனதில் தானாக ஏற்பட வேண்டும். கையில் துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். இலைகளைப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் குடங்களுக்குப் பதில் மண் பானைகளைப் பயன்படுத்தலாம். வீடுகளில் உள்ள குப்பைகளைத் தோட்டங்களில் உரமாகப் பயன்படுத்தலாம்.

இதுபோல அலுவலகம், ஹோட்டல் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருமே ஒன்றிணைந்து செயல்பட்டால் குப்பைகளை அறவே இல்லாது அகற்றலாம். சுகாதாரக்கேட்டையும் தவிர்க்கலாம். மேலும், தொண்டு நிறுவனங்கள், ரசிகர் மன்றங்கள், சுயஉதவிக் குழுவினர், பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்கள் குப்பைகளை அகற்றுவதைச் சேவையாகச் செய்யலாம். சாலைப் பாதுகாப்பு வாரம், சுகாதார வாரம் என்பதைப் போல குப்பை ஒழிப்பு வாரம் கடைப்பிடிக்கலாம். நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்களைக் கொண்டு குப்பைகளை அகற்றலாம்.

இது தவிர, அரசு மகளிர் குழுக்களைப் பயன்படுத்தி குப்பையிலிருந்து உரம் தயாரித்தல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆகியவற்றைச் செம்மையாகச் செயல்படுத்தலாம்.

இந்த விஷயத்தில் மக்களுக்குப் போதிய விழிப்புணர்வு மூலம் மனமாற்றத்தை ஏற்படுத்தினால் குப்பை இல்லா மற்றும் சுகாதரமான நல்லுலகு தொட்டுவிடும் தூரத்தில்தான் உள்ளது. மனது வைப்பார்களா?